ஈரோடு கிழக்கு வேட்பாளர் ரெடி.. முக்கிய ஆலோசனையில் ‘டாப்’ தலையே ஆப்சென்ட்.. 2 நாளும்! இதுதான் காரணமா?
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று 2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். நேற்றும், இன்றும் நடைபெற்ற இந்த ஆலோசனையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இன்றும் ஆலோசித்தனர். இந்த ஆலோசனையின்போது யாரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரைப்பது என்பது குறித்தும், வெற்றி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. சோனியா, ராகுல் பிரச்சாரத்திற்கு வருவார்களா? தினேஷ் குண்டுராவ் பதில்
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றன. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. அதிமுகவை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. பாஜகவின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரசார் வற்புறுத்தி வந்த நிலையில் அவர் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். அதற்கு பதில் தனது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று இரவு ஆலோசனை நடந்த நிலையில், இன்று காலை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பனிப்போர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரி பங்கேற்கவில்லை. கோஷ்டிப் பூசல்களுக்குப் பெயர்போன காங்கிரஸ் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், கே.எஸ்.அழகிரிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது
பங்கேற்கவில்லை
குறிப்பாக, ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் மோதல் சம்பவத்திற்குப் பிறகு ஈவிகேஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அழகிரிக்கு எதிராக டெல்லியில் புகார் கூறினர். கேஎஸ் அழகிரி பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
அழகிரி ஆப்செண்ட்
நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்கூட்டியே, தான் வரும் தகவலையும், வேட்பாளர் தேர்வு பற்றிய ஆலோசனைக் கூட்டம் விஷயத்தையும் தமிழ்நாடு தலைமைக்கு தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான கடலூருக்குச் சென்றார். தினேஷ் குண்டுராவ் வரும் தகவல் சொல்லப்பட்ட பிறகும், அவர், இப்போது கிளம்பினாலும் நான் வர தாமதமாகலாம், ஆலோசனைக் கூட்டத்தை நடத்தட்டும் எனக் கூறிவிட்டதாக கூறப்ப்படுகிறது.
கோஷ்டி பூசல்?
நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என்றால், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கவில்லை. இதனால், கோஷ்டி பூசல் காரணமாகவே அழகிரி கலந்துகொள்ளவில்லை என காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்புகள் கிளம்பியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, தலைமைக்கு பரிந்துரைப்பதற்கான 3 பெயர்களை இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்பாளர் பெயர்
இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத், தினேஷ் குண்டுராவிடம் விருப்ப மனு கொடுத்தார். அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். எதிரணியில் உள்ளவர்கள் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை. காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெறும்" எனத் தெரிவித்தார்.
காரணம் என்ன?
இதற்கிடையே, இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்காமல் தவிர்த்திருப்பது கதர் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டால், அவர் எம்.எல்.ஏ ஆவார். மூத்த எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியை அவருக்கு வழங்கி, செல்வப்பெருந்தகையை ஆஃப் செய்யலாம் என அழகிரி கணக்கு போட்டிருந்ததாகவும், இளங்கோவன் போட்டியிட மறுத்ததால் அழகிரி அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.