பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
இடைத்தேர்தலில் பாஜக திட்டம் பற்றியும், அண்ணாமலை ஈபிஎஸ்ஸை ஆதரிக்க நினைப்பது ஏன் என்பது பற்றியும் பத்திரிகையாளர் ப்ரியன் பேசியுள்ளார்.
சென்னை : "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவுக்கு இப்போது 4 ஆப்ஷன்கள் இருக்கின்றன. அண்ணாமலை மட்டும், நாம் ஏதாவது ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம், தான் கொங்கு மண்டலத்தில் தேர்தலில் நின்றால் ஈபிஎஸ்ஸின் ஆதரவு தேவைப்படும் என்பதால் எடப்பாடியை ஆதரிக்க நினைக்கிறார்." என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக கூட்டணியில் பரபரப்புகள் எழுந்து வருகின்றன. திமுக கூட்டணியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வாக்கு சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த இடைத்தேர்தலில் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளும் களமிறங்குவதாக அறிவித்துள்ள நிலையில், பாஜகவின் திட்டம் என்ன? அண்ணாமலையின் கணக்கு என்ன என்பது பற்றி நமது ஒன் ஒந்தியா பேட்டியில் பேசியுள்ளார் ப்ரியன். இனி அவரது பேட்டி..
சீமான் 'தில்’.. உற்றுப்பார்க்கும் அமித்ஷா! டெல்லிக்கு தெரியும் “அதே பாலிசி”! சொல்றது யாருனு பாருங்க!
அண்ணாமலை யார் பக்கம்?
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளுமே பாஜகவின் முடிவுக்காகக் காத்திருப்பதாகத் தெரிகிறதே.. பாஜகவுக்கான வாய்ப்புகள் என்னென்ன?
பதில் : பாஜகவை பொறுத்தவரை ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் விவகாரத்தில் ஆரம்பம் முதலே ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. எங்கள் ஆதரவு அமைப்பு ரீதியிலான அதிமுகவுக்கு தானே தவிர, தனிப்பட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் என நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை என பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறி இருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஏனெனில், அவருக்கு உள்ளூர் அரசியலில் நாளை தான் ஏதாவது தேர்தலில் நின்றால் ஈபிஎஸ்ஸின் ஆதரவு தேவைப்படும் என்பதால் சாதி ரீதியான அரசியலின்படி ஈபிஎஸ்ஸை ஆதரிக்க நினைக்கிறார். மற்ற பாஜகவினரைப் பொறுத்தவரை ஓபிஎஸ் 2017 முதலே பாஜகவின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார் என்பதால் அவரை திடீரென கைவிட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அதனால், அவர்கள் இந்த விவகாரத்தில் பேசாமல் அமைதி காக்கின்றனர். பாஜகவுக்கு இப்போது 4 ஆப்ஷன்கள் இருக்கின்றன.
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்கள்
1. விலகி நின்று வேடிக்கை பார்ப்பது. நீங்கள் இருவரும் போட்டி போட்டு, யாருக்கு பலம் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவை ஒருபக்கம் இருந்தாலும், தேர்தல் களத்தில் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள், நாங்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறோம்.
2. நீங்கள் இருவருமே போட்டி போட வேண்டாம், நாங்கள் நிற்கிறோம். அனைவரும் எங்களை ஆதரியுங்கள், திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கலாம்.
3. எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாம். ஈரோடு கிழக்கைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு பலமும், செல்வாக்கும் இருக்கிறது. அதனால், எடப்பாடியால் நல்ல போட்டியைக் கொடுக்க முடியும் என்பதால் எடப்பாடியை ஆதரித்தால் திமுகவுக்கு செக் வைக்கலாம் என்ற முடிவை எடுக்கலாம்.
துடிக்கும் அண்ணாமலை
4. பாஜகவே நேரடியாக களமிறங்கலாம். தேர்தல் ஆணையம், மத்திய பாதுகாப்பு படை ஆகியவற்றை உள்ளே இறக்கி திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கலாம். இது நமக்கு சாதகமான பலன் தரும் என்ற ஐடியாவும் பாஜகவுக்கு இருக்கிறது.
இந்த 4 ஐடியாக்களில் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், ஒருவரை ஆதரித்து ஒருவரை கழற்றிவிடுவது, இரண்டு பேரையும் தள்ளி வைப்பது என பல விஷயங்கள் குழப்பமாக இருப்பதால் என்ன முடிவெடுப்பது என்பதில் திணறல் இருக்கிறது. அண்ணாமலை மட்டும், நாம் ஏதாவது ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.
சாதிக் கட்சி
கேள்வி : ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி அணி, கவுண்டர் சமூகத்திற்கான கட்சியாக அதிமுகவை மாற்றிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அண்ணாமலையும், ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பது, சாதி ரீதியான ஒருங்கிணைவு என்ற பார்வையை ஏற்படுத்தாதா?
பதில் : பாஜக புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்துவிட்டது. அண்ணாமலை சாதி ரீதியாக எடப்பாடிக்கு ஆதரவு அளிக்கும் காம்பினேஷன் ஒருபக்கம் இருந்தாலும், எல்.முருகனையும் அந்தப் பக்கம் இறக்கியிருக்கிறார்கள். அவர் கவுண்டர் சமூகத்திற்கு நேர் எதிரான அருந்ததியர் சமூகத்தில் இருக்கிறார். அதனால், பாஜக இரு பக்கமும் பேலன்ஸ் செய்கிறது. அதிமுகவில் எடப்பாடி, தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் பலமாக இருப்பதால், கவுண்டர் கட்சி என்ற பெயர் பலமாக இருக்கிறது. அதேசமயம், வன்னியர்கள் ஆதிக்கமும் ஈபிஎஸ் அணியில் இருக்கிறது. கவுண்டர் + வன்னியர் ஆதிக்கம் தான் ஈபிஎஸ் அணி அதிமுகவில் அதிகம் இருக்கிறது. சிவி சண்முகம், முனுசாமி உள்ளிட்டோர் அடங்கிய வன்னியர் லாபியை பொறுத்தவரை பாஜகவுக்கு எதிரானதாக இருக்கிறது. கொங்கு லாபி பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது.
சாதி சாயம்
அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே ஒரு சாதி சாயம் பூசப்பட்டுவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சாதி பேதமெல்லாம் கடந்து எல்லோரையும் அரவணைக்கும் கட்சியாக இருந்த அதிமுக, இன்று ஈபிஎஸ் தலைமையில் சாதி ரீதியாக பிரிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது என்கிறார்கள். அண்ணாமலையும் தனக்கு கூட்டம் குவிகிறது என்கிறார். 2011 தேர்தலில் வடிவேலுவுக்கு கூடாத கூட்டமா? அந்தக் கூட்டத்தைப் பார்த்து திமுக பெரிய வெற்றியைப் பெறப்போகிறது என்றார்கள். ஆனால், நடந்ததே வேறு. எனவே, கூடும் கூட்டத்தைப் பார்த்து பலத்தை முடிவு செய்ய முடியாது. ஓபிஎஸ்ஸுக்கு கொங்கு பகுதியில் செல்வாக்கு இல்லை.
மைனாரிட்டி தலைவர் - பிளஸ்
ஜெயலலிதாவோ, கருணாநிதியோ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அது சாதகமான விஷயமாக இருந்தது. அவர்களை பெரும்பான்மை சாதியினராக முத்திரை குத்த முடியாது. இப்போது அந்தச் சூழல் இல்லை. ஓபிஎஸ், தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியின் முகமாக இருக்கிறார். ஈபிஎஸ், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சமூக மக்களின் முகமாக இருக்கிறார். இருவரும் ஒவ்வொரு பலமான சமூக பின்னணி கொண்டவர்கள் என்பதால் இரு அணிகளுக்கும் சாதிய முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க முடியாது.
முத்திரை
இதே, ஒரு மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால், அவர் எல்லா தரப்பினரையும் அனுசரித்துச் செல்வார்கள். மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், எந்த சாதியினருக்கும் சப்போர்ட்டாக இல்லாமல், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு செல்வார். உதயநிதிக்கும் எதிர்காலத்தில் பிரச்சனை கிடையாது. அவர் எல்லா சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்வார். மைனாரிட்டி சமூகத்தவர் தலைவராக இருப்பதில் அட்வாண்டேஜ் அதிகம். அது ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு இல்லாததால், அந்த பிரிவுகள் சாதி ரீதியான முத்திரை குத்தப்படுகிறது. அதேதான் இன்று அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் நடந்திருக்கிறது.
பாஜக் ஒதுங்குவது சாத்தியமா?
கேள்வி : பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற்பது சாத்தியமா? ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் போட்டியிடும்போது சின்னம் தொடர்பான சிக்கல் வரும். எனவே அங்கு பாஜகவின் கை இருக்கும். பாஜகவால் முழுமையாக விலகி நிற்க முடியுமா? பாஜகவுக்கு எதிராக ஈபிஎஸ் திரும்பும் வாய்ப்பு இருக்கிறதே?
பதில் : பாஜக நடுநிலையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டால் இருவருக்கும் ஆதரவளிக்காமல் விலகித்தான் நிற்கும். இரட்டை இலை கிடைக்கிறதோ இல்லையோ, சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு ஓபிஎஸ்ஸை விட அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் எண்ணமாக இருக்கிறது. பாஜக தங்களை ஆதரிக்காவிட்டால், மைனாரிட்டி வாக்குகள் அதிகமாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூட ஈபிஎஸ் நினைக்கலாம். அதனால், சின்னம் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜகவை பகைத்துக்கொள்ளும் அளவுக்கு ஈபிஎஸ் செல்ல மாட்டார். அவரது அணியில், பாஜகவை ஆதரிக்கும் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதும் முக்கியமான விஷயம்.
இவ்வாறு பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.