செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில் முருகனை அதிமுக அமைப்பு செயலாளராக நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை : அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை தற்போது அதிமுக அமைப்பு செயலாளராக நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு போட்டியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதால், செந்தில் முருகனுக்கு பதவி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் செந்தில்முருகன். ஆனால் செந்தில்முருகன் தற்போது வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம், பொதுக்குழுவைக் கூட்டி அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்குமாறு உத்தரவிட்ட நிலையில், ஈபிஎஸ் தரப்பு நிறுத்தும் வேட்பாளரையே ஆதரிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவெடுத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒற்றுமையாகப் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.

இரு அணிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினர் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசுவையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். கட்சியில் தங்கள் இருப்பை நிலைநாட்டுவதற்காக இரு தரப்பும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட களமிறங்கியது. இதனால் இரு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இரட்டை இலை
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவின் முடிவின்படி தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு அவைத் தலைவர் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அஃபிடவிட்
இதனையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஒப்புதல் படிவங்களை இன்று விநியோகம் செய்தார். அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அவருக்கு ஒப்புதல் அளிக்கும் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்கும்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவுறுத்தியுள்ளது. இந்த படிவம் ஓபிஎஸ் தரப்பினருக்கும் அனுப்பப்படுகிறது. திங்கட்கிழமை இந்த படிவங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து இரட்டை இலைக்கு உரிமை கோரவுள்ளது ஈபிஎஸ் அணி.

வாபஸ் பெற முடிவு
உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவிக்க உத்தரவிட்டுள்ளதால் ஓபிஎஸ் அணி சார்பில் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்த செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் உறுதி செய்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கே எங்கள் ஆதரவு, ஒற்றுமையாக களமிறங்க முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

புதிய பதவி
ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகனுக்கு ஓ.பன்னீர்செல்வம் புதிய பதவி அளித்துள்ளார். செந்தில் முருகனை அதிமுக அமைப்புச் செயலாளராக நியமித்து உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். செந்தில் முருகன் இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு கைம்மாறாக ஓபிஎஸ், கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
-
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
‘என்ன ஓபிஎஸ் எவ்வளவு செலவு செய்வீங்க’.. நேர்காணலுக்கு தயாரான ஸ்டாலின்.. பரபரக்கும் போடிநாயக்கனூர் -
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே












Click it and Unblock the Notifications