முருகனை வைத்து முருகன் போட்ட பிளான்.. பாஜகவின் வேல் யாத்திரையின் பரபர பின்னணி
சென்னை: யார் தடுத்தாலும் பாஜகவின் வேல் யாத்திரை நடக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல் முருகன் தடலாடியாக அறிவித்துள்ளார். இந்து மத ஆதரவாளர்கள் அனைவரின் வாக்குகளையும் மொத்தமாக தங்கள் பக்கம் இழுத்து, சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மூலம் தாமரையை மலர வைக்கவும், பாஜகவை வளர்க்கவும் பல்வேறு வழிகளில், பல்வேறு முயற்சிகளை அக்கட்சியின் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாஜகவினர் இப்போது புதிதாக கையில் எடுத்துள்ள அஸ்திரம். வேல் யாத்திரை அஸ்திரம். தமிழகர்களின் கடவுள் என்றால் அது முருகன் என்பதால், தமிழகம் முழுவதும் வேல் யாத்திரையை அறிவித்துள்ளது பாஜக.
பாஜக அறிவிப்பு
இதன்படி திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் திட்டமிட்டபடி நடக்கும் என்று பாஜக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,.
எல் முருகன் கைது
கடந்த 6ம் தேதி தடையை மீறி திருத்தணியில் யாத்திரை தொடங்கியது. யாத்திரையில் பங்கேற்ற எல் முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து காலை 10 மணிக்கு யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக காலை 10.30மணி அளவில் எல் முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் புறப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் பாஜகவினர் அணிவகுத்து சென்றனர்.
பாஜக தலைவர்கள்
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், போகவிடமால் தடுத்தனர். இதனால் உடன் வந்த பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து எல் முருகனின் கார் உள்பட 5 வாகனங்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலை அடைந்தது. அங்கு எல் முருகன், சிபி ராதாகிருஷ்ணன், எல் கணேசன். கேசவ விநாயகம், வினோஜ் பி செல்வம், சக்ரவர்ததி, எம்.என்.ராஜா, கரு.நகராஜன், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் வந்தனர்..
தலைவர்கள் கைது
அங்கு தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் எல் முருகன் உள்பட பாஜகவினர் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய எல் முருகன், யார் தடுத்தாலும் வேல் யாத்திரை நடக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
எல் முருகன் அதிரடி அறிவிப்பு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எத்தனை சக்திகள் தடுத்தாலும், அதை எல்லாம் மீறி பாஜகவின் வேல் யாத்திரை நடக்கும். இந்த வேல் யாத்திரை வெற்றித்தான் நமக்கான வெற்றி. வருகிற சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக இருக்கும். பாஜக கைகாட்டுபவர்கள் தான் முதல்வராக இருப்பார்கள் யாருடைய ஆட்சி என்பதை பாஜக தான் தீர்மானிக்கும்" என்றார்.
நெருக்கடி தரப்போகிறது
எல் முருகன் இந்த கூட்டத்தில் பாஜக கைகாட்டுபவர்களே முதல்வர் என்று சொன்ன போதிலும், எடப்பாடி மற்றும் அதிமுக குறித்தோ, அல்லது ஆட்சியமைக்க ஆதரவு அளிப்போம் என்றோ கூறவில்லை. சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக இதுவரை முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக சீட் கேட்கும்
இதனிடையே வரும் தேர்தலில் அதிமுகவிடம் அதிக அளவில் சீட் கேட்டு நெருக்கடி தரும் என்று கூறப்படுகிறது. அத்துடன் அதிக இடங்களில் வென்று கூட்டணி ஆட்சிக்கு அச்சாரம் போடும் ஆசையும் பாஜகவுக்கு இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் எல் முருகன், நாங்கள் கை காட்டுபவரே முதல்வர் என்று கூறியதாக கூறப்படுகிறது. எது எப்படியோ சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க பாஜக அதிக பாய்ச்சலுடன் பயணிக்க தயாராகி வருகிறது என்பது மட்டும் அண்மைக்கால செயல்களின் மூலம் தெரிகிறது.