ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. விலகிய பாமக.. பின்னணியில் 5 ‛மேஜர்’ விஷயம்.. கணிப்பு சரிதான்!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என பாட்டாளி மக்கள் கட்சி இன்று அறிவித்துள்ளது. மேலும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அந்த கட்சி தெரிவித்துள்ள நிலையில் தான் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பாமக விலகியதன் பின்னணியில் உள்ள 5 முக்கிய விஷயங்கள் என்ன? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 4ம் தேதி அவர் காலமானார். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக ஒதுக்கி உள்ளது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார். அநேகமாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
களமிறங்கும் ’கை’ துளிர்க்குமா இரட்டை இலை..குறுக்கே வரும் தாமரை? ஈரோடு இடை தேர்தலில் இத்தனை போட்டியா?
எதிர்த்து களமிறங்கும் அதிமுக
இந்நிலையில் தான் திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலையில் எளிதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வீழ்த்தி விடலாம் எனும் முனைப்பில் அதிமுக போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக ஓ பன்னீர் செல்வம் தரப்பும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இருதரப்பும் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. இதுதவிர டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாமக விலகல்
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடப்போவது இல்லை என பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதுபற்றி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தெளிவுப்படுத்தினார். அப்போது, அவர் ‛‛ ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுபற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூடி விவாதித்தது. இதில் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப்போவது இல்லை என முடிவு எடுக்கப்பட்டது. அதோடு எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது'' என்றார்.
விலகலுக்கு 5 முக்கிய காரணங்கள்
மேலும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானாலோ, கட்சித் தாவினாலோ அல்லது சட்டசபை உறுப்பினர் பதவி காலியானாலோ அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை. வெற்றி பெற்ற கட்சியைச சேர்ந்த ஒருவரை எம்எல்ஏவாக்கலாம். இது தான் எங்கள் நிலைப்பாடு. இதனை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம்'' என்றார். இந்நிலையில் தான் இடைத்தேர்தலில் இருந்து பாமகா போட்டியிடாமல் விலகி உள்ளதற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
முதல் காரணம்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி 2008ல் மறுசீரமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. கடந்த 2011ல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவில் போட்டியிட்டு சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் அதிமுகவின் தென்னரசு வெற்றி பெற்றார். 2021ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இதில் 2016ல் மட்டுமே இந்த தொகுதியில் பாமக போட்டியிட்டது. அப்போது பாமக சார்பில் ராஜேந்திரன் என்பவர் போட்டியிட்டு வெறும் 2,111 ஓட்டுக்கள் (வாக்கு சதவீதம் 1.46 சதவீதம்) மட்டுமே பெற்று 9 இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கு பாமகவுக்கு வரவேற்பு இல்லை என நினைத்து தற்போதும் போட்டியில் இருந்து பாமக விலகிஇருக்கலாம் என கூறப்படுகிறது.
2வது காரணம்
மேலும் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணி என அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இருஅணியினரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஓ பன்னீர் செல்வம் பாமகாவிடம் ஆதரவு கேட்க உள்ளதாகவே அறிவித்தார். இதனால் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் குழப்பம் ஏற்படலாம். இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் பாமகா தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், யாருக்கு ஆதரவில்லை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
3வது காரணம்
மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. தற்போதைய சூழலிலும் அதிமுக-பாமக இடையேயான கூட்டணியில் சுமூக உறவு இல்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை இருதரப்பும் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்றாலும் கடந்த ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியின்றி பாமக தனித்து போட்டியிட்டதே இதற்கு சான்று என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக, திமுகவுடன் கூட்டணி சேரலாம் என்ற தகவலும் இணையதளங்களில் அவ்வப்போது சுற்றி வருகிறது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் போட்டியில் இருந்து பாமக பின்வாங்கி இருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.தாக சொல்லப்படுகிறது.
4வது காரணம்
மேலும் பாமக தற்போது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு 2026 சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியைமைக்கும் முனைப்பில் பாமக வியூகம் வகுத்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து மாநிலங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறது. இது பாமகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால் அது நிர்வாகிகளுக்கு உற்சாகத்துக்கு தடைபோடலாம் என அந்த கட்சி கருதி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
5வது காரணம்
மேலும் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது தான் பெரும்பாலும் நடந்து வருகிறது. பணபலம், அதிகார பலம் ஆகியவற்றால் ஆளும் கட்சிக்கு எப்போதும் இடைத்தேர்தல் சாதகமாக அம்சமாக இருக்கும் என்ற பேச்சு பொதுவாக உண்டு. இதை நன்கு உணர்ந்த பாமக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடாமல் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.