மா.செக்களுக்கு போன ஹேப்பி நியூஸ்.. ‘சரியா இருக்காது’ - திமுக ‘தலை’யின் முடிவுக்குப் பின்னணி என்ன?!
சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முடிவு, தற்போதைய மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.
திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன.
ஸ்டாலினின் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கும் மாவட்ட செயலாளர்கள் பலர் அதிரடியாக மாற்றப்பட இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஸ்டாலின் அப்படியான அதிரடி ஆக்ஷன் எதையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும், அவர் வேறொரு கணக்கு வைத்திருப்பதாகவும் திமுக மேலிட வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
’பச்சை ஆரஞ்ச் சிகப்பு’ முதல்வர் டேபிளுக்கு போன மா.செ.கள் பட்டியல்! இத்தனை பேர் நீக்கமா? பரபர திமுக!
திமுக உட்கட்சித் தேர்தல்
திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கிளை, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகளுக்கான பெரும்பாலான இடங்களுக்கான தேர்தல் சுமூகமாக நடைபெற்று உள்ளது. மாநகராட்சியில் உள்ள பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறையை சமீபத்தில் திமுக தலைமை வெளியிட்டது. அதன்படி தேர்தல் நடக்கிறது.
சுமூகமாக
தேர்தல் ஆணைய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்தி அதனை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிளை, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பெரும்பாலான இடங்களில் முடிவடைந்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள்
அடுத்ததாக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நடைபெற இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களில் பெரிதாக போட்டி இல்லாத நிலை தான் இருக்கிறது. ஒருசில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் பதவிக்காக இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் காய்நகர்த்தி வருகின்றனர். இதனால், சில இடங்களில் சிக்கல் ஏற்படுவதை திமுக தலைமை உணர்ந்துள்ளது.
மாற்றம் நடக்குமா?
திமுக மாவட்டச் செயலாளர்களின் பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்டும் திமுக தலைவர் ஸ்டாலினின் கைவசம் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இந்த மாவட்ட செயலாளர்கள் செயல்பட்ட விதத்தை வைத்துத்தான் அவர்களை மாற்றலாமா வேண்டாமா என ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால், பல்வேறு மாவட்ட செயலாளர்களும் கிலியில் இருக்கின்றனர்.
ஸ்டாலினின் முடிவு
மா.செக்கள் பலர் மாற்றப்படலாம் எனப் பேச்சுகள் நிலவி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் முடிவோ வேறாக இருக்கிறது என்கிறார்கள். கடந்த 10 ஆண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் சளைக்காமல் பணியாற்றியுள்ளனர். சொந்தப் பணத்தை கட்சிக்காக செலவு செய்துள்ளனர். அவர்களில் பலருக்கு இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என ஸ்டாலின் நினைக்கிறாராம்.
சரியாக இருக்காது
இதனால், ஆட்சிக்கு வந்து 1 வருடம் தான் ஆகியிருக்கும் நிலையில் மாவட்ட செயலாளர் பதவியையும் அவர்களிடம் இருந்து பறிப்பது சரியாக இருக்காது, கட்சி மீதே அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையும், எனவே, பழைய ஆட்களே இருக்கட்டும், மீண்டும் அனைவருக்கும் சில காலம் வாய்ப்பு கொடுப்போம் என்ற முடிவில் ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில்
குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் மா.செக்கள் அதிமுக வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக புகார்கள் கிளம்பின. அவர்களில் வெகுசிலர் பற்றி பொறுப்பு அமைச்சரிடம் இருந்தும் 'பேட் பெர்ஃபாமன்ஸ்' என தகவல் போனதாம். அவர்கள் அந்த அமைச்சர் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் என்பதால், இந்த ரிப்போர்ட் குறித்தும் ஸ்டாலின் அவசரமாக எந்த முடிவும் எடுக்க நினைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மா.செக்கள் நிம்மதி
இந்தத் தகவல் மெதுவாக மாவட்ட செயலாளர்கள் வரை பரவியிருக்கிறது. தலைமையின் இந்த முடிவால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். எனினும் கூட, கடுமையான போட்டி நிலவும் சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இன்னும் முழு மகிழ்ச்சி கிடைக்கவில்லையாம். இதற்காக, தலைமையின் பார்வையில் படும் வகையில் உழைத்து வருகிறார்களாம். என்ன நடக்கப்போகிறது என்பது விரைவில் தெரியவரும்.