சிக்கலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.. '13ஆம் தேதி இருக்கு'.. சோதனை தீருமா? பிரச்சனை நேருமா?
சென்னை : அதிமுக மோதல் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை விடாமல் விளாசி வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சிக்கல் தீரப்போகிறதா? சோதனை வரப்போகிறதா? எனக் கேள்வி எழுந்துள்ளது.
நில மோசடி தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாரின் சகோதரர் மகேஷ் புகார் அளித்திருந்தார்.
நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இந்த வழக்கில் அமைச்சர் தெரிவித்த வாதங்களுக்கு, மகேஷ் தரப்பில் தகுந்த பதில் சொல்லப்பட்டுள்ளதால், தீர்ப்பு ஜெயக்குமாருக்கு எதிராக வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

உறவினர் நில மோசடி புகார்
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சராக இருந்ததால்
மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு அது என்றும், 2016-ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதில் உள்நோக்கம் உள்ளது என்றும் ஜெயக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு 2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால், அவர் மீது புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

13ஆம் தேதி
இதையடுத்து இந்த வழக்கில் செப்டம்பர் 13-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக மோதல் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்று, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை விளாசி வரும் ஜெயக்குமாருக்கு, இந்த வழக்கு உத்தரவு சாதகமாக வரப்போகிறதா? சிக்கலைத் தரப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications