ஸ்டாலினுக்கு சிக்கல்.. எங்களை ஒதுக்க பார்க்கிறீர்களா?.. முதல்வருக்கு கோரிக்கையுடன் பறந்த லெட்டர்..!
மேயர் பதவிகளை கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளது தேவேந்திர வேளாளர் சங்கம்
சென்னை: சொந்த கட்சிக்குள்ளேயே மேயர் பதவிக்கான போட்டா போட்டி எழுந்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளை சமாளிக்க முடியாமல் திமுக திணறி கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவில் வேறு ஒரு பிரச்சனை தலைதூக்கி உள்ளது.
கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்சியினருக்கும் பதவிகளை வழங்க வேண்டுமென்று திமுகவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் சிபிஐக்கு திருப்பூர் துணை மேயர், 1 நகராட்சி, 3 பேரூராட்சி தலைவர்கள் பதவி ஒதுக்கீடு
அதிலும், திருமாவளவன் ஆரம்பத்தில் இருந்தே மேயர் போஸ்டிங் வாங்கிவிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து வருகிறார்.. சென்னை மேயர் மற்றும் 8 என்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே கோரிக்கை வைத்திருக்கிறார்...
திருமாவளவன்
எனவே, வெற்றி பெற்றவர்களின் பெயர் உட்பட அனைத்தையும் லிஸ்ட்டாகவே ஸ்டாலினிடம் தந்திருக்கிறார்.. திருமாவளவனை போலவே, காங்கிரஸ் கட்சியினரும் கன்னியாகுமரி, சிவகாசி இரண்டு மேயர் பதவிகளை எதிர்பார்க்கின்றனர்.. மேலும், ஆவடி அல்லது தாம்பரம், திருச்சி அல்லது கோவை ஆகிய மாநகராட்சிகளில், துணை மேயர் பதவியும் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளும் கேட்டு, காங்கிரஸ் தரப்பில் விருப்ப பட்டியல் வழங்கப்பட்டுள்ளது..
கோரிக்கை
இப்படிப்பட்ட சூழலில்தான், தங்களுக்கும் மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான சமூகங்களில், தேவேந்திரகுல வேளாளர் சமூகமும் ஒன்றாகும்.. ஆனால், சென்னையை சுற்றியுள்ள மாநகராட்சிகளுக்கு, பட்டியலின மேயர் பதவிகளில், அச்சமுதாயத்திற்கு இடம் தரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆவடி, துாத்துக்குடி, கோவை மாநகராட்சிகளில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், அச்சமுதாய மக்களின் ஓட்டுகளே, திமுகவுக்கு அதிகமாக கிடைத்துள்ளன.
தேவேந்திர குல வேளாளர்
அதனால், திமுக கட்சியிலும் சரி, அமைச்சரவையிலும் சரி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு, போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குறை அச்சமூகத்தினருக்கு இன்னமும் இருக்கவே செய்கிறது.. அதனால்தான், இந்த முறை மேயர் பதவி, குறிப்பாக, தூத்துக்குடி, கோவை, ஆவடி ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளை, அந்த சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும் என்று அனைத்திந்திய தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளதாம்.
பாஜக
இந்த கோரிக்கையை திமுக மேலிடம் பரிசீலிக்குமா என்று தெரியவில்லை.. காரணம், சட்டசபை தேர்தலில், அந்த சமுதாயத்தினர் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால், திமுகவுக்கு சற்று கோபம் இருப்பதாக தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், பல பெயரில் அழைக்கப்பட்ட அந்த சமுதாய மக்களை, ஒரே பிரிவாக அதாவது தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க காரணமாக இருந்ததே பாஜகதான்.. மேலும், பட்டியலினத்தில் இருந்து விடுவிக்கவும் அக்கட்சி வாக்குறுதியையும் அக்கட்சி தந்துள்ளது..
விசுவாசம்
அதனாலேயே, அந்த சமுதாயத்தினர் பாஜக மீது விசுவாசம் காட்டப்படுவதாகவும், அதனாலேயே இச்சமூகத்தினரை திமுக ஒதுக்கி பார்ப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு பரவலாக உள்ளது... 2 நாட்களுக்கு முன்பு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் ஒரு பேட்டி தந்திருந்தார்... அதில், தமிழகத்தில் பாஜகவின் நிலை உயர்ந்து இருக்கிறது என்றால், அதுக்கு முக்கிய காரணமே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் தான்.. தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வழங்கியதில் அடிப்படையில் நன்றி விசுவாசமாக 80 சதவிகித விழுக்காடு இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்து இருக்கிறோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.