தைரியமாக எழுதுங்கள்... எல்லோரும் ஜெயிக்கலாம்... மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தைரியமாக தேர்வு எழுதுங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் தேர்வு எழுதுங்கள் எனவும் பதற்றமடைய வேண்டாம் எனவும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடையலாம் என்று துறையின் அமைச்சர் என்ற முறையில் வாழ்த்தியதாகவும் மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. கொரோனா நோய்த் தொற்று 2020 ஆம் ஆண்டு முழு அளவில் தாக்கம் இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் 2021 ஆம் ஆண்டிலும் பொதுமுடக்கம் தொடர்ந்த நிலையில், பொதுத் தேர்வு அனைத்தும் ரத்து செய்யப் பட்டன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பொதுத் தேர்வு முழு அளவில் நடத்தப்பட உள்ளது. அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, தொடர்ந்து 28 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 3,91,343 மாணவர்களும் 4,31,341 மாணவிகளும் எழுதுகின்றனர். பொதுத் தேர்வில் 10 மணி முதல் 10.15 வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்கவும் அடுத்த 3மணி நேரம் விடை எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரியில் 14,627 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இன்று 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் முதல்முறையாக பொதுத் தேர்வை எதிர்கொள்கின்றனர்.
10,11 வகுப்புகளில் பொதுத்தேர்வில் எழுதாத நிலையில், மாணவர்கள் முதல் முறையாக பொதுத் தேர்வை எழுதுகின்றனர். மேலும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்றும் பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் தேர்வு எழுதுங்கள் எனவும் பதற்றமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
Recommended Video

தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களும் தேர்வுகளை தைரியமாக எழுத வேண்டும். அனைவரும் தேர்ச்சியடையலாம் என்றும் துறையின் அமைச்சர் என்ற முறையில் வாழ்த்தியதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறினார்.
கொரோனா காலம் முடிந்து முதன் முறையாக மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எனவே எவ்வளவு சீக்கிரம் பேப்பர்களை திருத்தி முடிவுகளை அறிவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுகளை அறிவிப்போம் என்றார். ஜூலைக்குள் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications