சோகம்.. ஆசையாய் விளையாடிய கோவை சிறுவர்கள்! அருகிலேயே இருந்த “ஆபத்து” - விழுங்கிய குளம்.. மூவரும் பலி
கோவை: சூலூரில் குளத்தின் அருகில் நின்று விளையாடிக்கொண்டு இருந்த 3 சிறுவர்கள் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஏரிகள், குளங்கள், ஓடைகள், கண்மாய்கள் போன்ற பல நீர்நிலைகள் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. தொடர்ந்து மழைபொழிவும் இருப்பதால் நீர் நிலைகள் செழிப்போடு உள்ளன.
ஒருபக்கம் மகிழ்ச்சியான தகவலாக இது இருந்தாலும் மறுபக்கம் இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் மகிழ்ச்சியோடு குளித்து வருகின்றனர்.
3 சிறுவர்கள் உயிர்களில் காட்டிய அலட்சியம்..திருப்பூர் விவேகானந்தா காப்பகத்திற்கு சீல்.. அரசு அதிரடி
தொடரும் விபத்துக்கள்
ஆனால் போதிய நீச்சல் பயிற்சி இன்றி இளைஞர்கள், சிறுவர்கள் நீர்நிலைகளில் குளிப்பது, தடுப்புகள் இல்லாத நீர்நிலைகள் ஓரமாக சிறுவர்கள் விளையாடுவது, நீர்நிலைகளில் நின்றுகொண்டு செல்பி எடுப்பது போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
3 சிறுவர்கள்
இதே போன்ற சோக நிகழ்வுகள்தான் தற்போது கோவையில் நடந்து இருக்கிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) ஆகியோர் சூலூர் குளக்கரையில் விளையாடுவது வழக்கம். அதேபோல் இன்றும் குளக்கரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
குளத்தில் மூழ்கி பலி
அப்போது மூவரும் குளத்தில் தவறி விழுந்தனர். இதனை அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நேரில் பார்த்துள்ளார். உடனடியாக குளத்திற்கு ஓடி செல்வதற்கு முன்பாகவே மூவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூவரது உடலையும் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனை
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மூன்று சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.