கோவையில் பட்டப் பகலில்.. பட்டா கத்தியுடன் ரவுடி அட்டகாசம்.. வீட்டு கேட்டை உடைக்கும் பரபர வீடியோ
கோவை: கோவையில் பட்டப் பகலில் ரவுடி ஒருவர் பட்டா கத்தியுடன் ஒரு வீட்டுக்குச் சென்று அங்குள்ளவர்களை தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவை மசகாளிபாளையம் முல்லை நகரில் வசித்துவரும் மணிகண்டன் என்பவர் பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது.
இவர் இந்த பகுதியில் அவ்வப்போது குடிபோதையில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மக்கள் ஆதங்கம்
இவரது நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வெறுத்துப் போயுள்ளனர். காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததால் பொறுத்து பொறுத்து பொங்கிய அந்த ஏரியா மக்கள், ரவுடியை தட்டிக் கேட்க முடிவு செய்துள்ளனர்.

பட்டா கத்தியுடன் கலாட்டா
இன்று காலை ரவுடியின் வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள் அவரது அராஜகத்தை எதிர்த்து கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அவரது நடவடிக்கைகளை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதனால் மணிகண்டன் கடுமையாக கோபமடைந்துள்ளார்.
பட்டாகத்தியை தூக்கிக் கொண்டு, போனில் வீடியோ எடுத்தவர் வீட்டுக்கே போய்விட்டார். கற்களைக் கொண்டு கேட்டை உடைத்தும், கத்தியால் ஓங்கி வெட்டிவிடுவதாக வீட்டுக்காரரை மிரட்டவும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கேட்டை தாண்டி வீட்டுக்குள் குதிக்க முற்பட்டார் மணிகண்டன். இதனால் பெண்கள் பீதியடைந்தனர்.

வீடியோ பதிவு
இந்த காட்சிகளை அண்டை வீட்டுக்காரர்களில் சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ரவுடி கேட்டை தாண்ட முற்பட்டபோது.. உள்ளே வந்தால் நல்லா இருக்காது என அந்த வீட்டு பெண்மணி கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

காவல்துறை நடவடிக்கை
பட்டப்பகலில் பெண்கள் இருக்கும் வீடு என்று கூட பாராமல், பட்டா கத்தியோடு, ரவுடி மிரட்டல் விடுத்த சம்பவம் கோவை, மசகாளிபாளையம் பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர், இதுபோன்ற சமூக விரோதிகளை, இரும்புக் கரம் கொண்டு உடனடியாக ஒடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications