செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சி.. பிரதமர் பெயரை ஏன் கூறவில்லை..மவுனமாக வெளியேறிய பாஜகவினர்!
கோவை: செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சியில் இருந்து திடீரென ஏராளமான பாஜகவினர் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

எத்தனை அணிகள்?
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பாக ஆண்கள் பிரிவில் 3 அணியும் மற்றும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் மொத்தமாக 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களம் காண உள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கு ஆலோசகராக செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் வந்த தீச்சுடர்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தொடங்கி வைக்கப்பட்ட ஜோதி ஓட்டம், இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு பயணித்து இன்று கோவை கொண்டுவரப்பட்டது. அந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமச்சந்திரன், முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

பாஜக குற்றச்சாட்டு
நிகழ்ச்சிக்கு முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சிகள் குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள் பேசினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரதமரின் பெயரை கூட நிகழ்ச்சியில் பயன்படுத்தவில்லை என்று கூறி செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சிக்கு வந்த பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

அமைதியாக வெளியேறிய பாஜக
மேலும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே மேடையின் எதிர் புறத்தில் கோவை மாவட்ட பாஜகவின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் முன் வரிசையில் 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் அமர்ந்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பிரதமர் பெயரை பயன்படுத்தாததால், நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆதரவாளர்கள் மௌனமாக வெளிநடப்பு செய்தனர்.

பாஜக குற்றச்சாட்டு
ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஓரங்கட்டப்படுவதாக பல்வேறு மாவட்டங்களிலும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் தற்போது ஜோதி ஓட்ட நிகழ்ச்சியிலும் மத்திய அரசுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று பாஜகவினர் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர். ஒருபக்கம் செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பாஜகவினர் பிரதமருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறி சில பகுதிகளில் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications