”நோட்டா கிட்ட வச்சுக்கோ..” பாஜகவை சீண்டும் திமுக.. கரூரில் ஒட்டிய போஸ்டருக்கு கோவையில் பதிலடி!
கோவை: கரூரில் செந்தில் பாலாஜியை விமர்சித்து பாஜக தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு, கோவையில் திமுக சார்பாக பாஜகவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரிய வெற்றியை பெற முடியாமல் திமுக திணறியது. இதனைத்தொடர்ந்து கொங்கு மண்டல பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின்னர், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றியை திமுக பதிவு செய்தது.
எஸ்பி வேலுமணியின் கோட்டை என்று அழைக்கப்படும் கோவையிலேயே திமுக அபார வெற்றியை பதிவு செய்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் 50 ஆயிரம் பேரை ஒரே கூட்டத்தில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து இருந்தார். செந்தில் பாலாஜி செயல்பாடுகளை கணிக்க முடியாமல் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் திணறி வருகிறது.

செந்தில் பாலாஜி மீது புகார்
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக தரப்பில் நிலக்கரி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதோடு, பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய ஆளுநரிடம் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

செந்தில் பாலாஜி பற்றி போஸ்டர்
இதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். ரூ. 5,000 கோடிக்கு அதிபர் செந்தில் பாலாஜி என்று கூறி போஸ்டர்களை பாஜக ஒட்டி இருந்தது. கரூர் முழுக்க பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சாலை சந்திப்புகள், தடுப்புகள், முக்கிய பாலங்களுக்கு கீழ் எல்லாம் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

திமுக பதிலடி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்திலேயே பாஜக போஸ்டரை ஒட்டியது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வந்தன. இதனிடையே கரூரில் நடைபெற்ற திராவிட பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, நோட்டாவுடன் போட்டி போடக்கூடிய கட்சியினர் கூறும் தவறான கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

பாஜக மீது விமர்சனம்
இந்த நிலையில் கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜகவை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், "நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்" என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications