கோவையில் மழையால் சாலையில் வெள்ளம்.. சட்டென களத்தில் இறங்கிய போலீஸ்.. கால்வாயை சுத்தம் செய்து அசத்தல்!
கோவை: கோவையில் இடைவிடாது பெய்த கனமழையால், பிரதான சாலையில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து அங்குள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து மழைநீர் வடிந்தோட உதவிய போலீஸ்காரருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோவையில் கனமழை
நீலகிரி, பெரம்பலூர், தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதில் இன்று காலை கோவை மாவட்டத்தில் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் ஒருசில முக்கிய சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

வாகன ஓட்டிகள் சிரமம்
கழிவுநீர் கால்வாய்களும் அகற்றப்படாத குப்பைகளின் காரணமாக அடைத்துக்கொண்டது. இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல் சாலைகள் குளம்போல் காட்சியளித்தன. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்ற வாகன ஓட்டிகளும் சிரமமடைந்தனர். வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையும் தொடர்ந்து பெய்து வந்ததால் அந்த சாலையில் மேலும் தண்ணீர் பெருகியது. இந்த நிலையில், மழைநீர் வெள்ளம்போல் தேங்கியிருப்பதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் ஏன் தண்ணீர் தேங்குகிறது என்பதை கவனித்து, வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான பணியில் ஈடுபட்டார்.

எதற்கும் தயங்காமல்
உடனடியாக அந்த போலீஸ்கார சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயின் மேற்புறம் இருந்த குப்பைகளை அகற்றினார். எதற்கும் தயங்காமல் அவர் அந்த குப்பைகளை நீக்கி தண்னீர் வடிந்தோட முயற்சி மேற்கொண்டார். அந்த போலீஸ்காரர் குப்பைகளை அகற்றியதால் கழிவுநீர் கால்வாய் வழியாக சாலையில் தேங்கியிருந்த மழைநீர் வேகமாக வெளியேறியது. இதனால் சிறிது நேரத்தில் அந்த சாலையில் வெள்ளம் போல் தேங்கியிருந்த மழை நீர் சிறிது நேரத்தில் வடிந்தோடியது. தொடர்ந்து அந்த சாலையில் வாகன போக்குவரத்து சீராகி, வாகன ஓட்டிகள் சிரமமின்றி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதற்காக பலர் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து சென்றனர்.

போலீஸ்காரருக்கு பாராட்டு
குறிப்பிட்ட நேரத்தில் கச்சிதமாக செயல்பட்ட போலீஸ்காரரின் இந்த செயலை அங்கிருந்த யாரோ வீடியோவாக படம்பிடித்துள்ளனர். தற்போது ஐபிஎஸ் அதிகாரியான ஸ்டாலின் என்பவர் இந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட சில மணி நேரங்களில் பலர் வீடியோவுக்கு லைக் போட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் போலீஸ்காரருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒருவர் போலீஸ்காரின் செயல் மிகச் சிறப்பு என்றும், இன்னொருவர், 'காவல் துறையினரின் வேலை இதுவல்ல என்றாலும், காவல் துறையினர் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் செயல். வாழ்த்துகள்' என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றர்.












Click it and Unblock the Notifications