தொழிலதிபரிடம் ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி.. பரபரப்பு புகார்!
கோவை : தொழிலதிபரிடம் ரூ.25.59 லட்சம் பணம், 15 சவரன் நகை ஆகியவற்றை மோசடி செய்த இந்து மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி பிரசன்னா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இடப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.25.59 லட்சம் பணம், 15 சவரன் நகை மோசடி செய்த ஜோதிடர் பிரசன்னா, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு மாநில துணைத் தலைவராக இருக்கும் பிரசன்னா, சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபரை ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தொழில் அதிபர்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காலி இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் நிலம் தொடர்பான பிரச்சனையில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவருமான பிரசன்னா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

ஜோதிடர் பிரசன்னா
கருப்பையாவிடம், இடம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தருவதாக கூறியுள்ளார் பிரசன்னா. அதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக ரூ.25 லட்சத்து 59 ஆயிரத்து 200 பணம் கொடுத்துள்ளார். மேலும், மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையாவின் மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியுள்ளார்.

போலீசில் புகார்
கருப்பையாவிடம் இருந்து பணம், நகை என வாங்கிக்கொண்ட பிறகும் இடப் பிரச்சனையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதையடுத்து, பிரசன்னாவிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்காததால், இதுகுறித்து கருப்பையா கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

4 பேர் மீது வழக்குப்பதிவு
பிரசன்னாவின் மோசடி செயலுக்கு அவரது மனைவி அஸ்வினி (31), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (28), பிரகாஷ் (58) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளதாகவும் கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார். கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத் தலைவரான ஜோதிடர் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications