விரக்தியில் தவறான தகவல்களை பரப்புறாங்க..! பார் டெண்டர் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
கோவை: டாஸ்மாக் பார் டெண்டர் கிடைக்காதவர்களே விரக்தியில் தவறான தகவலை பரப்புவதாக கோவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆகிய இரண்டு துறைகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் சார்பாக பார் டெண்டர் விடுக்கப்பட்டது. டாஸ்மாக்குகளில் புதிதாக பார் அமைப்பதற்கு இந்த டெண்டர் எடுக்கப்பட்டு பலருக்கு டெண்டர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெருக்கமான சிலருக்கு டெண்டர் வழங்கியதாக பார் உரிமையாளர்கள் புகார் கூறியுள்ளனர். தங்களிடம் ஏற்கனவே இருந்த பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், புதிய நபர்களுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பல கோடி கை மாறி உள்ளது என்று பார் உரிமையாளர்கள் கூறினார்.

பார் டெண்டரில் முறைகேடு
இதையடுத்து சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு சில நாட்களுக்கும் முன்னர் பார் உரிமையாளர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திடீர் போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் டாஸ்மாக் பார் டெண்டர் கிடைக்காதவர்களே விரக்தியில் தவறான தகவலை பரப்புவதாக கோவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை ராகநாதபுரம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் இதனைதொடர்ந்து சென்னைக்கு அடுத்த படியாக அதிக குடும்ப அட்டை உறுப்பினர்கள் கொண்ட கோவையில் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன் என்றார்

மின் கோபுர விவகாரம்
விவசாய நிலங்களில் மின் கோபுரம் தொடர்பான விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகள் நிலத்திற்கான இழப்பீட்டை தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் விபரங்களை கொடுத்தால் இழப்பீடு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

விரக்தியில் பேசுகிறார்கள்
டாஸ்மாக் பார் டெண்டர் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் டெண்டரில் பார் கிடைக்காதவர்கள் விரக்தியில் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என குற்றம் சாட்டினார். மேலும், பார் நடத்தும் வசதி இருந்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்கள் டெண்டர் விடப்படாமலே சிலர் நடத்தி வந்தனர் எனவும், அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய நிலையில் அவைகள் எல்லாம் முறைப்படுத்தியுள்ளோம் என கூறினார்.












Click it and Unblock the Notifications