"கார் விற்பனை செய்ததை தவிர.. என் மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை" முகமது தல்காவின் தாயார் வேண்டுகோள்!
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தனது மகனான முகமது தல்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரின் தாயார் அர்சுத் பீபீ தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிறு அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார்.
இது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு, கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட பலரும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம்.. அண்ணாமலையின் அழுத்தத்தால் என்ஐஏ விசாரணை.. சொல்கிறார் எச்.ராஜா!
5 இளைஞர்கள் கைது
இதனைத் தொடர்ந்து நிலையில் சனிக்கிழமை இரவு ஜமேசா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை அவர்கள் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, ஜமேசா முபீனின் நண்பர்களான உக்கடம் கோட்டை மேடு ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை கைது செய்தது.
6வது நபர் கைது
இவர்களை அனைவரும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வழக்கின் புதிய திருப்பமாக, ஜமேஷா முபீனின் உறவினர் அப்சர் கானை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் வெடிபொருட்களுக்கான வேதிப்பொருட்களை ஆன்லைனில் அப்சர்கான் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமது தல்கா தாய் பேட்டி
இந்த நிலையில் முகமது தல்காவின் தாயார் அர்சுத் பீபீ, கார் விற்பனை செய்ததை தவிர கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களுக்கும் என் மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து முகமது தல்காவின் தாயார் அர்சுத் பீபீ கூறுகையில், கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபீனுக்கு தன் மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கார் விற்பனை செய்தபோது, கஷ்டமராக ஜமேஷா முபீன் வந்தார். வேறு எந்த தொடர்பும் தன் மகனுக்கு இல்லை.
யார் என்றே தெரியாது
அதேபோல் மீதமுள்ள 4 இளைஞர்களுக்கும் என்ன தொடர்புள்ளது என்பதும் தெரியாது. அவர்கள் யார் என்பது தெரியாது. தம்பிக்கு துணி வியாபாரம் செய்வதற்காக கார் தேவை என்று கார் வாங்கி சென்றார். இதுதான் யதார்த்தம். காரினை இலவசமாக வழங்கும் அளவிற்கு நாங்கள் ஷோரூம் எல்லாம் வைத்திருக்கவில்லை. நாங்களே கால் வயிறு கஞ்சிதான் குடித்து வருகிறோம்.
காரை இலவசமாக வழங்கவில்லை
எங்களின் வருமானம் மருத்துவ செலவுகளுக்கே சரியாக இருக்கிறது. இதனால் இலவசமாக கொடுக்கவில்லை. இந்த வழக்கில் தனது மகன் மீது அப்பட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.