தமிழகத்துக்கு தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்ப வேண்டுமாம்.. கேட்பது அர்ஜூன் சம்பத்
கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடரும் நிலையில் தேவைப்பட்டால் தமிழகத்துக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த திமுக தலைவர் ஆ.ராசா எம்.பி, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார். அவரது இந்த பேச்சுக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெட்ரோல் குண்டு வீச்சு.. இன்று மாலைக்குள் அனைவரும் கைது - திருமாவளவனிடம் டிஜிபி உறுதி
பெட்ரோல் குண்டு வீச்சுகள்- டிஜிபி வார்னிங்
இந்நிலையில் கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட இடங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகரில் ஆர்.ஏ.எப் இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது எனவும் எச்சரித்திருந்தார்.
அர்ஜூன் சம்பத் போராட்டம்
இதனிடையே கோவையில் இன்று ஆ.ராசாவையும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களையும் கண்டித்து இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆ.ராசாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆ.ராசா உருவபொம்மையை எரிக்க இந்து மக்கள் கட்சியினர் முயன்றனர். ஆனால் அந்த உருவபொம்மையை போலீசார் பறித்தனர். மேலும் ஆ.ராசா உருவப் படத்தை சிறுவர்கள், பெண்கள் காலணிகளால் அடித்து முழக்கம் எழுப்பினர்.
இந்து- முஸ்லிம் ஒற்றுமை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: தேசிய புலனாய்வு ஏஜென்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவை அல்ல. இஸ்லாமியர்களுடன் நாங்கள் இணக்கமாகவே வாழ்ந்து வருகிறோம். ஆனால் இந்து- முஸ்லிம் மோதலை உருவாக்கும் வகையில் எஸ்டிபிஐ, பிஎப்ஐ செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகளை நாங்கள் முறியடித்து ஒற்றுமையாக இருக்கிறோம். என்.ஐ.ஏ. சோதனையை எதிர்க்கும் திமுகவினர் ஓட்டுப் போட்டுதான் என்.ஐ.ஏ. சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.
ராணுவம் தேவை
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன. இந்த சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும். இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.