நடு ரோட்டில் கொடூரமாக தாக்கிக் கொள்ளும் மாணவர்கள்.. அஞ்சி ஓடிய பொதுமக்கள்.. கோவையில் என்ன நடந்தது?
கோவை: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ள நிலையில், இப்போது கோவையிலும் மீண்டும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த சில காலமாகவே ஆசிரியர்களை மாணவர்கள் தரக்குறைவாகப் பேசுவது, அட்டகாசம் செய்வது போன்ற வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மாணவர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கோவை
தவறு செய்யும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள் ஓயும் முன்னரே, இப்போது அடுத்த விவகாரம் கிளம்பி உள்ளது. இந்த முறை கோவையில் இரு தரப்பு மாணவர்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் மாணவர்கள் இரு வேறு குழுக்களாகப் பிரிந்து கொண்டு ஒருவரை மற்றொருவர் முரட்டுத்தனமாகத் தாக்குவது தெளிவாகப் பதிவாகி உள்ளது.

தாக்கிக் கொண்ட மாணவர்கள்
ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனை காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் வைரலாகி பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டை
நேற்று சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. புது வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென அடிதடியாக மாறியது. இரு தரப்பு மாணவர்களும் தரையில் உருண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தலையிட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

டிஜிபி சைலேந்திரபாபு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இதுபோன்ற செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். எங்கள் பெற்றோரிடம் பெரிய அளவுக்குச் செல்வம் இல்லை. ஆனால், எங்களுக்குச் செல்வம் எல்லாம் எங்கள் வகுப்பில் உள்ள மேசைகளும் நாற்காலிகளும் தான். அதை நாம் எப்படி உடைக்க முடியும்? சிறந்த உலகத்தைக் கற்பிக்கும் நமது ஆசிரியர்களைத் தாக்க எப்படி முயலலாம்" என்று கேட்டுள்ளார்.

அதிகரிக்கும் சம்பவங்கள்
சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரேக்கார்ட் நோட் சமர்ப்பிக்கும்படி ஆசியர்கள் கூறியதால், பிளஸ் 1 மாணவர்கள் சிலர் அவரை தாக்க முயன்று மிரட்டினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications