1000 டெக்னாலஜி வந்து என்ன புண்ணியம்.. செப்டிக் டேங்கில் இறங்கிய 3 தொழிலாளர்கள் பரிதாப மரணம்
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் உயிரிழந்தனர்
Recommended Video
கோவை: என்னைக்குத்தான் இந்த கொடுமை நம்மைவிட்டு போகுமோ தெரியவில்லை. ஆயிரம் டெக்னாலஜி வந்தாலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய போய், அதில் மாண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.
கோவை, கோவில்மேடு பகுதியைச்சேர்ந்த ரவி என்பவர், பன்றி இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்காக பன்றிகளை வளர்க்க கீரநத்தம் கொண்டையம்பாளையத்தில் ஒரு கூடமே வைத்திருக்கிறார். இது பன்றி அறுவை கூடமும் கூட!
இந்நிலையில் இன்று காலை ரவி, பன்றி வளர்ப்பு மற்றும் அறுவை கூடத்திலுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக குழிதோண்டும் வேலை பார்ப்பவர்களான வேடியப்பன், ராஜப்பன், இன்னொரு வேடியப்பன்களை அழைத்து சென்றுள்ளார்.
முதலில் ராஜப்பன்தான் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய போனார் ஆனால் கொஞ்ச நேரத்திலேயே விஷவாயு தாக்கிவிட்டது. இதனால் அவர் மயக்கமடைய, மற்ற இருவரும் அவரை காப்பாற்ற உள்ளே இறங்கினர்.
ஆனால் அவர்களும் சேர்ந்து மொத்தம் 3 பேருமே விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதை பார்த்ததும் கறிக்கடைக்காரர் ரவி தலைமறைவாகி விட்டார். தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு, தப்பி ஓடிய ரவியை தேடி வருகின்றனர்.
உயிரிழந்த 3 பேரும், தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களது வேலையே, குழி தோண்டி தருவதுதான் என்பதும் தெரியவந்துள்ளது.