பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை- கோத்தபாய ராஜபக்சேவின் செயலாளர் ஜயசுந்தர ராஜினாமா?
கொழும்பு: இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் செயலாளர் ஜயசுந்தர தமது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம் கடந்த மே மாதம் 6-ந் தேதி, ரசாயன உரங்கள் இறக்குமதிக்கு அதிரடியாக தடை விதித்தது. இந்த தடையானது இலங்கையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாத இறுதியில் ரசாயன உரங்கள் மீதான தடை நீக்கப்பட்டது.
https://tamil.oneindia.com/why-sri-lanka-faces-food-emergency-cs-432331.html
இந்த காலகட்டத்தில் இலங்கையின் நெல் மற்றும் தேயிலை உற்பத்தி கடுமையான சரிவை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் 18 லட்சம் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு 30 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் கோத்தபாய ராஜபக்சே அரசின் ரசாயன உரம் மீதான தடை அறிவிப்பானது இலங்கையில் நெல் சாகுபடியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது.
ராஜபக்சேக்கள் மீது அதிருப்தி
இது தொடர்பாக குருநெகல விவசாயிகள் கூறுகையில், காலந்தோறும் நாங்கள் ராஜபக்சே குடும்பத்தினருக்குதான் வாக்களித்தோம்.. பிரசாரம் செய்தோம். ஆனால் ராஜபக்சேக்களின் அரசாங்கத்தின் கொள்கையால் இப்போது விவசாயத்தையே கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். திடீரென ரசாயன உரங்களை தடை செய்து இயற்கை உரங்களை பயன்படுத்த உத்தரவிட்டார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே. இதனால் இனி வாழ்நாளில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டோம்.. வாக்களிக்க மாட்டோம் என கொந்தளிக்கின்றனர்.
தேயிலை உற்பத்தி பாதிப்பு
இதேபோல் இலங்கைக்கு கணிசமான அன்னிய செலாவணியை பெற்றுத் தரக் கூடிய தேயிலைத் தோட்ட தொழிலும் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டது. மேலும் இலங்கை நீண்டகாலமாகவே ரசாயன உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் திடீரென இலங்கை அரசாங்கம் இத்தகைய தடையை விதித்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் பேரழிவுக்கு இழுத்துவிட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் உணவுப் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் புத்தி மாரம்பெ.
பொருளாதார அவசர நிலை
இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாட்டுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர். நாடு முழுவதும் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. மேலும் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததும் உணவுப் பொருள் பற்றாக்குறையை அதிகரித்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கொரோனாவில் இலங்கையின் பொருளாதாரம் பெரும் சரிவை எதிர்கொண்டது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து இலங்கையில் அரிசி கையிருப்பு போதுமான அளவுக்கு இருக்கிறது; உணவுப் பொருட்களுக்கு எந்த பஞ்சமும் தட்டுப்பாடுமே இல்லை என நியாயப்படுத்திக் கொண்டிருந்தது.
Recommended Video
அதிபரின் செயலாளர் ஜயசுந்தர ராஜினாமா?
இந்த பின்னணியில் ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான அமைச்சர் சமல் ராஜபக்சே அண்மையில், சக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் மீதும் அதிபர் கோத்தபாயவின் செயலாளர் ஜயசுந்தர மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் ஒட்டுமொத்த இலங்கையின் நெருக்கடிக்கு காரணமே ஜயசுந்தர எனவும் விமர்சித்திருந்தார் சமல். இதனால் ஜயசுந்தர ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதனையடுத்தே ஜயசுந்தர தற்போது தமது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.