இலங்கை விமான படை தளபதி வீட்டில் கோத்தபாய ராஜபக்சே பதுங்கலா? விமான படை மறுப்பு
கொழும்பு: இலங்கை விமானப் படை தளபதி வீட்டில் கோத்தபாய ராஜபக்சே பதுங்கி உள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை கடற்படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மாளிகையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே எங்கே பதுங்கி இருக்கிறார்? என்பது அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் கோத்தபாய ராஜபக்சே ராணுவத்திடம் தஞ்சமடைந்தார் எனவும் கூறப்படுகிறது.
சில ஊடகங்கள், விமான நிலையம் மூலம் கோத்தபாய ராஜபக்சே தப்பிச் செல்ல முயன்றார்; அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் இந்திய அரசு கோத்தபாயவை அனுமதிக்க மறுத்துவிட்டது என்றும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
மேலும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக கோத்தபாய கையெழுத்திட்டுவிட்டார் என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கை போலீஸ் முன்னாள் அதிகாரி அஜித் தர்மபால, கோத்தபாயவின் தலைமறைவு இடம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இலங்கை விமான படை தளபதி வீட்டில் கோத்தபாய பதுங்கி இருப்பதாக கூறியிருந்தார். இது இலங்கையில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இலங்கை விமான படை அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விமான படை தளபதி வீட்டில் கோத்தபாய ராஜபக்சே தஞ்சமடையவில்லை; அப்படி கோத்தபாய தங்கி இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செய்திகள் இலங்கை விமானப் படைக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோத்தபாய ராஜபக்சே, கடல்வழியாக இலங்கையை விட்டு தப்பிச் செல்வார்; அண்டை நாட்டுக்கு அவர் தப்பிச் சென்று அடைக்கலம் கோருவார் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.