எந்த துறையும் தப்பிக்கல... இலங்கையில் போராட்டத்தில் குதித்த ஐ.டி. ஊழியர்கள்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐ.டி, துறை ஊழியர்களும் வீதியில் இறங்கி பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது இது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்து இருக்கிறது.
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

போராட்டத்தில் வன்முறை
அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன. கடந்த 31 ஆம் தேதி இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே பதவி விலகக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனை தொடர்ந்து இலங்கையில் அவசர நிலையும், தலைநகர் கொழும்புவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை.

பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலையிழப்பு
பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

பரவத் தொடங்கும் போராட்டங்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.

ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
கடந்த 2 நாட்களுக்கு முன் இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். தலைநகர் கொழும்புவில் கருப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications