ராஜபக்சேக்களுக்கு உக்கிர எதிர்ப்பு-70ஆண்டுக்குப் பின் இலங்கையில் 2000 யூனியன்களின் மாபெரும் ஸ்டிரைக்
கொழும்பு: இலங்கையில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

இலங்கை தொடர் போராட்டங்கள்
இலங்கையின் பொருளாதார சீரழிவை சீரமைக்காத ஜனாதிபதி கோத்தபயா, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி ஒட்டுமொத்த நாடும் போராட்டத்தில் குதித்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் போராட்டங்கள், கிளர்ச்சிகள் தொடருகின்றன.

முதல் ஹர்த்தால்
தற்போதைய பொருளாதார சீரழிவை சமாளிக்க இலங்கை அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பொதுமக்களோ ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தைவிட்டு வெளியேறுவதே தீர்வு என வலியுறுத்துகின்றனர். இதனை வலியுறுத்தி ஏற்கனவே நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அதில் 1,000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

மீண்டும் ஹர்த்தால்
இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் நாடு தழுவிய முழு அளவிலான வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் அனைத்து துறைகளும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன. இலங்கையில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் இது. கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்துமே வெறிச்சோடி காணப்படுகின்றன.
Recommended Video

அனைத்தும் வெறிச்சோடின
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ரயில்கள் மற்றும் அனைத்து தனியார் பேருந்துகளும் வேலை நிறுத்தத்தில் குதித்தன. மேலும் நிறுவனங்கள், வீடுகளிலும் இன்று கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழக வம்சாவளித் தமிழர்களின் மலையகப் பகுதிகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.ஈழத் தமிழரின் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் இழுத்து பூட்டப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து இல்லாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடியே காணப்பட்டன. இலங்கையில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு சிலோன் ஹர்த்தால் என்ற பெயரில் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தற்போது 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே போல் ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வழக்கம் போல அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களும் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications