வேற வழி தெரியல! நாளுக்கு நாள் மோசமாகும் இலங்கை பொருளாதாரம்.. நிதி அமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
Recommended Video
அண்டை நாடான இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அங்குப் பிரச்சினை இருந்து வந்த போதிலும், இப்போது நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது.
கடந்த காலங்களில் வாங்கிய கடனுக்கான வட்டியும் சேர, இலங்கை மீளவே முடியாத பொருளாதார நிதி நெருக்கடியை இப்போது சந்தித்து உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சத்தில் உள்ளது.

இலங்கை பொருளாதாரம்
இலங்கை பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இரவு பகல் பாராத அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நிலைமையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. ஏற்கனவே, 1 பில்லியன் டாலர் கடனுதவியை அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அதேபோல டீசல் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் 40 ஆயிரம் டன் டீசலையும் இந்தியா அனுப்பியது.

அமெரிக்காவிடம் உதவி
இருப்பினும், அங்கு நிலைமை மேம்பட்டதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் இலங்கைப் பிரதிநிதிகள் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து 4 பில்லியன் டாலர் கடன் பெற இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கான தொகை மற்றும் கடனை திரும்பச் செலுத்த இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது
புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வரும் ஏப்ரல் 18இல் அமெரிக்கா செல்ல உள்ளனர். இது தொடர்பாக அலி சப்ரி கூறுகையில், "இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர எங்களுக்கு உடனடியாக அவசர நிதி தேவை. இந்த நிதியை அவர்கள் விரைவில் எங்களுக்கு அளிக்க வேண்டும்" என்றார். நிதியமைச்சர் அலி சப்ரி உடன் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.

இலங்கை நிலை
அலி சப்ரி மேலும் கூறுகையில், "பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து வல்லுநர்கள் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இலங்கை பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார். 81 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட இலங்கை இப்போது $8.6 பில்லியன் மதிப்புள்ள கடனை எதிர்கொண்டுள்ளது.

பொருளாதார நிதி நெருக்கடி
இலங்கை நாட்டில் மிகக் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் ராஜபக்ச அரசுக்கு எதிரான அரசியல் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசை உருவாக்க அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுத்தார். இருப்பினும், இதற்கு எந்த அரசியல் கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications