அட பாவமே! மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை.. காகித இறக்குமதி செய்யக் கூட காசில்லையாம்!
கொழும்பு: அண்டை நாடான இலங்கை இப்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
குட்டி தீவு நாடான இலங்கை பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பி இருந்த ஒரு நாடாகும். கொரோனா காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை, இன்னும் கூட முழுமையாக மீளவில்லை.
இதன் காரணமாக இலங்கை மிக மோசமான பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இத்துடன் கடந்த காலங்களில் வாங்கிய கடனுக்கான வட்டியும் சேர, இலங்கை மீளவே முடியாத பொருளாதார நிதி நெருக்கடியை இப்போது சந்தித்து உள்ளது.

இலங்கை
இந்த ஆண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவீதம் என்ற அளவுக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது. மேலும், அந்நியச் செலாவணி குறைந்துள்ளதால், இலங்கை ரூபாயின் மதிப்பும் கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 290 இலங்கை ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கூட இதில் இருந்து தப்பவில்லை.

தேர்வுகள்
இதனால் இலங்கை நாட்டில் அத்தியாவசிய பணிகளும் கூட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனக்குத் தேவையான காகித தேவையில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது. இலங்கையின் அந்நிய செலாவணி மோசமாக உள்ள நிலையில், காகிதங்களை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் அங்குத் தேர்வுகள் கூட ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், காகித தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு முக்கிய செய்தி நிறுவனங்கள் செய்தித்தாள் அச்சிடுவதைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

பத்திரிகைகள்
காகித தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக இலங்கையின் தி ஐலண்ட் மற்றும் சிங்களப் பத்திரிகையான திவயின தங்கள் பதிப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை தி ஐலண்ட் அச்சுப் பதிப்பின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகச் செய்தி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் வருமானம் கடுமையாகக் குறைந்துள்ள நிலையில், இலங்கை மிக மோசமான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடி
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், செய்தித்தாள் காகிதங்களை இறக்குமதி செய்யும் செலவு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த அக்டோபர் 1981 முதல் அச்சில் இருக்கும் ஐலண்ட் செய்தித்தாள் இனி இ-பேப்பராக மட்டுமே வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை மீண்டும் மேம்படுத்த இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை முயன்று வருகிறது. பொருளாதார ரீதியாக உதவச் சர்வதேச நிதியத்திடமும் கூட இலங்கை உதவி கேட்டுள்ளது.

கடும் தட்டுப்பாடு
அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியை இலங்கை இப்போது எதிர்கொள்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும், அங்கு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெட்ரோல் நிரப்ப பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல அங்குப் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications