இலங்கை: கோத்தபாய ராஜபக்சே பதவி விலக கோரி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் போராட்டத்தில் குதிக்கிறது
இலங்கை: கோத்தபாய ராஜபக்சே பதவி விலக கோரி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் போராட்டத்தில் குதிக்கிறது
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி வரும் 25-ந் தேதி ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் போராட்டத்தில் குதிக்கிறது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வீதிகள் தோறும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வாங்குவதற்கு பல கிலோ மீட்டர் தொலைவிலான வரிசைகளில் பல மணிநேரம் காத்து கிடக்கின்றனர்.
இலங்கை: கொழும்பில் இன்றும் கோத்தபாய பதவி விலக கோரி போராட்டம்- அதிபர் அலுவலகத்தில் நுழைய முயற்சி!
கொழும்பில் பதற்றம்
இலங்கையின் இந்த நிலைமைக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகக் கோரி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொழும்பில் இன்று ஜேவிபி இளைஞரணியினர் நடத்திய போராட்டத்தின் போது அதிபர் செயலகத்துக்குள் நுழைய முற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
போராட்டத்தில் ரணில்
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளது. வரும் 25-ந் தேதி ரணில் தலைமையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளும் பங்கேற்க உள்ளன.
பதவி விலக வலியுறுத்தல்
இதனிடையே கோத்தபாய, மகிந்த மற்றும் பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி ஹெக்டர் அப்புஹாமி வலியுறுத்தி உள்ளார். மேலும் மத்திய வங்கியின் ஆளுநரும் பதவி விலக வேண்டும்; தாங்களாகவே பதவி விலகாவிட்டால் மக்கள் கிளர்ச்சி மூலம் விலக வைப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Recommended Video
நீக்கப்பட்ட பத்திரிகையாளர்
மேலும் சமூக வலைதளங்களில் கோத்தபாய அரசாங்கத்தை விமர்சித்ததாக அரசு ஊடகமான ரூபவாஹினி பத்திரிகையாளர் பரமி நிலப்த ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். இதற்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது..