பற்றி எரியும் இலங்கை...தொடரும் வன்முறையால் ஊரடங்கு நீட்டிப்பு - துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
இலங்கையில் வன்முறை நீடிப்பதால் நாளை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை: இலங்கையில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் மே 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். அதிபர், பிரதமர் பதவிகளில் இருந்து ராஜபக்சே சகோதரர்கள் உடனடியாக பதவி விலகக் கோரி கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர்.
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்..பட்டினத்தாரின் வரிக்கு சரியான சாட்சி இப்போது.. கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
மஹிந்த ராஜபக்சே தப்பி ஓட்டம்
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியை சுற்றி, மக்கள் முகாம் அமைத்து தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பல தரப்பிலும் நெருக்கடிகள் முற்றியதால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதித்தார். பதவி இழந்த மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. இதனால் உயிருக்கு பயந்து அவர்கள் பதுங்கியுள்ள திருகோணமலை கடற்படை தளத்தை பொதுமக்கள் சுற்றிவளைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பற்றி எரியும் இலங்கை
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறை மூண்டுள்ளது. ராஜபக்சே ஆதரவு அரசியல் தலைவர்களின் வீட்டை மக்கள் தீயிட்டு கொளுத்தினர். ஹம்பந்த்தோட்டாவில் ராஜபக்சேவின் பூர்வீக வீட்டையும் மக்கள் எரித்தனர். மேலும், மேடமுலானாவில் உள்ள மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபாய ராஜபக்சே வீட்டையும் மக்கள் சூறையாடியதோடு தீ வைத்து எரித்தனர். குருணேகலா பகுதியில் உள்ள மஹிந்தா வீட்டை கொளுத்தினர்.
ஊரடங்கு அமல்
மேடமுலானாவில் ராஜபக்சேவின் தந்தையான டி..ஏ.ராஜபக்சேவின் நினைவகத்தையும் அடித்து நொறுக்கி அங்கிருந்த ஸ்தூபிகளை தகர்த்து தீயிட்டு எரித்தனர். இந்த வன்முறையில் ஆளும் கட்சி எம்பி உட்பட 8 பேர் பலியாகினர். 249 பேர் காயமடைந்தனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுட்டுத்தள்ள உத்தரவு
இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முப்படையினருக்கு அனுமதி வழங்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கோத்தபாய ராஜபக்சே வேண்டுகோள்
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது. அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இலங்கையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், வன்முறையை கைவிடுமாறும் அதிபர் கோத்தபாய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
ஊரடங்கு நீட்டிப்பு
வன்முறை சம்பவங்களால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கை முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் ஊரடங்கை மே 12 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.