காந்தி நகருக்கு ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்.. கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவிக்கும் பாஜக!
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதி காங்கிரஸ் பாஜக என இரு தேசிய கட்சிகளுக்கும் மிக முக்கியமான தொகுதி. அத்வானி தொடர் வெற்றிகளை பெற்று வந்த இந்த தொகுதியில் பாஜகவின் தேர்தல் வியூக மன்னன் என புகழப்படும் அமித்ஷா இப்போது போட்டியிடப் போகிறார். காங்கிரசும் தங்களது பழைய செல்வாக்கை மீட்டெடுக்க போராடி வருகிறது.
1989 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியை பாஜகவிடம் பறிகொடுத்தது. அதன் பின்னர் பாஜகதான் இங்கு தொடர் வெற்றியை பெற்று வருகிறது. நார்த் காந்திநகர், கலோல், சனாந்த், காட்லோடியா, வெஜல்பூர், நாரண்புரா மற்றும் சபர்மதி ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் உள்ளன. குஜராத் மாநில பாஜகவில் முக்கிய தலைவரான சங்கர்சிங் வகேலா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை வெற்றிப் பெற வைத்த தொகுதி இந்த காந்தி நகர். இந்த தொகுதியில் அத்வானி பலமுறை எளிதாக வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அத்வானி இங்கு 4 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காந்திநகர் மக்களவை தொகுதியில் எல்கே. அத்வானி 1988 ம் ஆண்டு முதல் எளிதாக வெற்றிபெற்று வருகிறார்.
இம்முறையும் அவருக்கே சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முற்று முழுதாக ஓரம்கட்டப்பட்டு பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அமித்ஷா இந்த தொகுதி மூலமாக தனது முதல் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளார். ஆனால் அவர் இங்கு வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல என்றே தோன்றுகிறது. காரணம் பாஜகவில் ஏற்பட்டு இருக்கும் உட்கட்சி பூசல். இந்த தொகுதி அத்வானிக்கு மறுக்கப்பட்டதும் அத்வானி நேரடியாகவே தனது வருத்தத்தை பதிவு செய்தா. பாஜகவை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததில் அத்வானிக்கு பெரும் பங்கு உண்டு.
அதை விட மோடியை காப்பாற்றியதில் மிக முக்கிய காரணியாக விளங்கியவரும் இதே அத்வானிதான். குஜராத் கலவரம் பெரும் பிரச்சனையாக எரிந்தபோது குஜராத் முதல்வரான மோடியை நீக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்கிறார். ஆனால் வாஜ்பாயின் முடிவை மாற்றி மோடியை காப்பாற்றியவர் அத்வானி. அதே அத்வானிக்கு அவமரியாதை செய்தவர் மோடி என்ற குற்றசாட்டு பாஜகவில் இப்போதும் உண்டு. இந்த நிலையில்தான் இப்போது அத்வானிக்கு வயது மூப்பு என்ற காரணத்தை காட்டி அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இது அத்வானி ஆதரவாளர்கள் மத்தியிலும் நடுநிலையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் என்றால் குஜரத்த்தின் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் -னும் காந்தி நகர் மக்களவை தொகுதியை கேட்டு காய் நகர்த்தி வந்தார். பாஜகவில் வேட்பாளர் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது காந்தி நகருக்கு வந்த ஆனந்தி பென் படேல், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காந்தி நகரின் பாஜக வேட்பாளர் என்று ஆனந்தியின் பெயரும் பல இடங்களில் எழுதப்பட்டது. இப்படி ஆனந்தி பென் படேல் குஜராத்தில் தேர்தல் வேலைகளை படு ஜரூராக செய்து கொண்டிருந்தார். அப்போது பாஜகவின் மத்திய குழு காந்தி நகர் மக்களவை தொகுதியை அமித்ஷாவுக்கு வழங்கியது. இதில் கடும் அதிருப்தி அடைந்தனர் ஆனந்தி பென் படேலும் அவரது ஆதரவாளர்களும்.
ஆனந்தி பென் படேல் குஜராத் முதல்வராக இருந்தபோதே தனக்கு என ஒரு பெரும் ஆதரவாளர் படையை உருவாக்கி வைத்திருந்தார். இவரது அதிருப்தி மற்றும் அத்வானிக்கு போட்டியிட சீட் வழங்கப் படாதது ஆகியவை இந்த தேர்தலில் நிச்சயமாக அமித்ஷாவுக்கு எதிராக இருக்கும் என்று தெரிகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்னதாக 2008 ம் ஆண்டு சார்கேஜ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற அமித்ஷா பின்னர் சர்கெஜ் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டபோது நாரன்புரா, கல்கோடியா, மற்றும் வேஜல்பூர் என மூன்று தொகுதிகளாக பிரிந்தது அப்போது நாரன்புரில் போட்டியிட்டு அமித்ஷா வென்றார். காந்தி நகர் மக்களவை தொகுதியில் இப்போது உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகள் பாஜகவிடமே உள்ளன. அதோடு அமித்ஷாவின் வியூகம் ஆகியவற்றை நம்பி இப்போது அமித்ஷா இப்போது காந்தி நகர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
காந்தி நகர மக்களவை தொகுதியை பொருத்தமட்டில் காங்கிரசுக்கு ஒரு செண்டிமென்றான தொகுதி. இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தங்களது பிரச்சார பயணத்தை காந்தி நகரில் இருந்தே துவக்குவது வழக்கம். ராகுல் காந்தியும் இம்முறை குஜராத்தில் இருந்தே தனது பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார்.
மிஸ்டர் அவுட் கோயிங் சார் ஜி... பிரதமர் மோடிக்கு நிக் நேம் வைத்த சத்ருகன் சின்ஹா!
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கு அருகில் வந்து முதல்வர் நாற்காலியை தவறவிட்ட காங்கிரஸ் 30 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி நகரை கைப்பற்றும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. மக்களிடம் செல்வாக்கு உள்ள சரியான வேட்பாளரை களம் இறக்குவதன் மூலம் எளிய மக்களை எளிதாக சென்று அடையலாம் என கருதுகிறது காங்கிரஸ். அதோடு பிரியங்கா காந்தி ஹர்திக் படேல் ஆகியோரை பிரச்சாரத்திற்காக களம் இறக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளாராக நார்த் காந்திநகர் சட்டப் பேரவை தொகுதியின் உறுப்பினர் - டாக்டர் சிஜே.சௌடா களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இவர் அல்லது தாக்கூர் சமூகத்தை சேர்ந்த யாரவது ஒருவருக்கு சீட் வழங்கப் படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
30 ஆண்டுகளாக காந்தி நகர் தொகுதி தங்கள்வசம் இல்லையென்றாலும் இம்முறை பாஜகவில் இருக்கும் கோஷ்டிப் பூசல், ஆட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறுகிறார்கள் காங்கிரசார். அது பாஜகவுக்கு சாதகமான தொகுதி என்று பாஜக நினைக்குமேயானால் ஏன் பாஜகவின் வலிமையான வேட்பாளர் வியூகம் வகுப்பதில் மன்னன் என்றெல்லாம் புகழப் படும் அமித்ஷா ஏன் இங்கு களம் இறங்கவேண்டும் என்று கேள்வி கேட்கிறார்கள் காங்கிரசார்.