காலையிலேயே முதல்வர் ஸ்டாலின் விசிட்.. கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண உதவி
கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழ்பூவாணிக்குப்பம் பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றும், புகைப்படங்களை பார்த்தும் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து மழை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வியாழன் அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

பெரு மழை
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடையாமல், வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை பகுதியில் சனிக்கிழமை அதிகாலை கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெருமழை பெய்தது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து உள்ளது.

மழை அளவு
சீர்காழி (மயிலாடுதுறை) 44, கொள்ளிடம் (மயிலாடுதுறை) 32, சிதம்பரம் (கடலூர்) 31, அண்ணாமலை நகர் (கடலூர்) 28, சிதம்பரம் AWS (கடலூர்) 27, புவனகிரி (கடலூர்) 21, காட்டு மன்னார் கோயில் (கடலூர்) தலா 19, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 18, மயிலாடுதுறை, மணல்மேடு (மயிலாடுதுறை), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 16 செ.மீ என்ற அளவில் மழை அளவு பதிவானது.

கடும் வெள்ளம்
பெருமழையின் காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் பல பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் நீர் நிலைகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

விளை நிலங்கள்
பல்லாயிரக்கணக்கான ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வந்த இப்பகுதிகளில் பெருமழையால் விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. பயிர்கள் அழுகி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

முதலமைச்சர் பயணம்
இந்த நிலையில் நேற்று சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்தார். இதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இரவு புதுச்சேரியில் தங்கினார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர், அம்மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

கடலூரில் ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளப் பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளை அவர் பார்வையிட்டார்.

நிவாரண உதவிகள்
மேலும் கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் வீடுகளை இழந்த 13 பயனாளிகளுக்கும், கால்நடையை இழந்த 1 பயனாளிக்கும், நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications