கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை யாருக்காக நடந்தது... கேட்கிறார் சிபிஐ முத்தரசன்
கொடநாடு விவகாரத்தில் நடந்துள்ள கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாருக்காக செய்தனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர்: கொடநாடு விவகாரத்தில் நடந்துள்ள கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாருக்காக செய்தனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையை புறக்கணித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு இப்போது சந்தேகம் வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறையினர் துவக்கியுள்ளனர். தமிழக அரசியலிலும் சட்டசபையிலும் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதிமுகவினர் சட்டசபைக்கு கறுப்பு பேட்ச் அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாடு வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு நாட்கள் சட்டசபையை புறக்கணித்தனர்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிப்பதாக தெரிவித்தார்.
நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் விவாதிக்க எவ்வளவோ பிரச்னைகள் உள்ளபோது, கொடநாடு விவகாரத்தை பேச வேண்டுமா? உரிமை மீறல் என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,
கொடநாடு விவகாரத்தில் கொலையும், கொள்ளையும் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டவர்கள் யாருக்காக ஈடுபட்டனர் என்பது தான் இப்போது கேள்வி. அப்படி இருக்கையில் அதிமுகவினர் சட்டப் பேரவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு இப்போது அதிமுக மீது சந்தேகம் வந்து விட்டது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டியது இல்லை என்று ஒரு கட்சியின் நிர்வாகியே கூறுவது விந்தையாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முத்தரசன், லோக்சபா செயல்படாமல் 21க்கும் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதி விமர்சனம் செய்துள்ளார். இதனால் வரும் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மக்கள் லோக்சபா நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இதற்காக 5 லட்சம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து மக்களிடம் வினியோகிக்க உள்ளதாக கூறினார். இதில் மோடி அரசின் மக்கள் படும் துன்பங்களை விளக்கி உள்ளோம் தினமும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என்று கூறினார்.
முன்னதாக கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரும் பொருட்டு சபாநாயகரிடம் அக்கட்சியைச் சேர்ந்த செல்வபெருந்தகை மனு அளித்துள்ளார். சபாநாயகர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இதுதொடர்பாக விவாதம் நடைபெறும். இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்களுடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளைக்கும் தற்கொலைக்கும் காரணகர்த்தா யார் என்று மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே விசாரணை நடத்துவதாக ஆளும் திமுக அரசு கூறியுள்ளது. இதுவும் தேர்தல் வாக்குறுதிதான் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். உண்மையான குற்றவாளிகள் யார் என்று தெரியவந்தால் அது அதிமுகவிற்கும் நல்லதுதானே அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications