"புள்ளிங்கோ" ஹேர் ஸ்டைல்.. மாணவர்களுக்கு ஓட ஓட "முடி வெட்டிய" போலீஸார்.. கடலூரில் பரபர சம்பவம்
கடலூர்: கடலூரில் புள்ளிங்கோ ஸ்டைலில் சுற்றி வந்த பள்ளி மாணவர்களை போலீஸார் விரட்டி விரட்டி பிடித்து அவர்களின் முடியை ஒட்ட வெட்டி வீட்டுக்கு அனுப்பும் சம்பவம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரே பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவிப்பது தான் இதில் 'ஹைலைட்டே'.
மாணவர்களின் முடியை வெட்டி விடுவதுடன், இனி 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டக் கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகரிக்கும் புள்ளிங்கோஸ்..
காலம் காலமாகவே இளைஞர்கள் மத்தியில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஏற்ப ஹேர் ஸ்டைல் வைக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. 1950-களில் பாகவதர் ஹேர்ஸ்டைல், 1980-களில் ஹிப்பி ஹேர்ஸ்டைல், 1990-களில் அப்பாஸ் கட்டிங் என இந்த பழக்கத்துக்கு நீண்ட வரலாறே உண்டு. எனினும், மேற்கூறிய ஹேர்ஸ்டைல்கள் இளைஞர்களை ஒருபோதும் அசிங்கமாகவும், அருவருப்பாகவும் பார்க்க வைத்ததில்லை. ஆனால், தற்போது 2k கிட்ஸ் இளைஞர்கள் இடையே பிரபலமாகி இருக்கும் 'புள்ளிங்கோ' கட்டிங், அவர்களை ஒருவித ஜந்து போன்ற தோற்றத்துக்கு மாற்றி விடுகிறது. முன்பக்கம் கொத்தாகவும், பின்னால் அணில் வால் தொங்குவது போலவும் இருப்பதுதான் இந்த புள்ளிங்கோ ஹைர்ஸ்டைல். பார்க்கவே சகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் இந்த ஹேர்ஸ்டைல் வைத்தால் தான் 'கெத்து' என்ற மனநிலையில் 2k கிட்ஸ்கள் சுற்றி வருகின்றனர்.

"மாஸ்" என நினைத்து சீன்..
பொதுவாக, சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தான் இந்த புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் பரவலாக காணப்படுகிறது.இந்நிலையில், சாதாரணமாக முடி வைத்திருக்கும் மாணவர்கள் கூட இந்த புள்ளிங்கோ ஸ்டைலுக்கு மாறிவிட்டால் தன்னை ஒரு 'பெரிய ஆள்' என நினைத்துக் கொண்டு அலப்பறை செய்வதை நாம் பார்த்திருப்போம். மாணவர்களின் இந்த மன ஓட்டம் போலீஸாருக்கு தெரிந்துகொண்ட கடலூர் போலீஸார் தற்போது அதிரடி நடடிக்கையில் இறங்கியுள்ளனர்.

துரத்தி துரத்தி பிடித்து..
அதன்படி, கடலூர் மாவட்டம் புவனகிரியில் இதுபோல புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவைத்திருக்கும் மாணவர்களை தற்போது போலீஸார் தேடிச் சென்று பிடித்து அவர்களின் முடியை ஒட்ட வெட்டி வருகின்றனர். இதனால் போலீஸாரை பார்த்தாலே புள்ளிங்கோஸ் மாணவர்கள் தலைதெறிக்க ஓடி வருகின்றனர். ஆனாலும், போலீஸார் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று பிடித்து சலூன் கடைகளுக்கு அழைத்து போய் முடி வெட்ட செய்கின்றனர்.

"ஒழுக்கம் முக்கியம்"..
மேலும், புவனகிரியில் உள்ள அனைத்து சலூன் கடைகளுக்கும் சென்ற போலீஸார், 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புள்ளிங்கோ ஸ்டைலின் முடிவெட்டி விடக் கூடாது என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை போலீஸாரின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து புவனகிரி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம். ஒழுக்கம் இருந்தால்தான் படிப்பு வரும். இந்த ஒழுக்கமற்ற புள்ளிங்கோ ஹேர்ஸ்டைலால், மாணவர்கள் தங்களை ஒரு ரவுடியை போல கருதிக்கொள்கின்றனர். அதனால்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications