மரத்திலேயே அழுகி வீணாகும் பலாப்பழங்கள்.. பண்ருட்டி விவசாயிகள் கண்ணீர்!
கடலூர்: ஊரடங்கு காரணமாக பண்ருட்டி பலாப்பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், ஆயிரம் டன்னுக்கு மேலான பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
Recommended Video
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிகளவில் விளைகிறது. பண்ருட்டி என்றாலே நம் நினைவிற்கு வருவது பலாப்பழம்தான்.
செம்மண் பாங்கான பூமியான பண்ருட்டி, பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, மாளிகம்பட்டு, கீழக்குப்பம், நடுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கீழ்மாம்பட்டு, மேல் மாம்பட்டு, காடாம்டபுலியூர், மருங்கூர், காட்டுக்கூடலூர், சிறுதொண்டமாதேவி, தாழம்பட்டு, காளிக்குப்பம், நடுவீரப்பட்டு, புலியூர்காட்டுசாகை, அரசடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 800 க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா மரங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்தான் பலாப்பழ சீசன் களை கட்டும். பண்ருட்டி பகுதியில் சாகுபடி செய்யப்படும் பலாப்பழங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த 24 ஆம் தேதி முதல் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பலாப்பழம் அறுவடை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் டன்னுக்கு மேலான பலாப்பழங்கள் மரத்திலேயே வெடித்து, அழுகி உள்ளன.
ஏற்கனவே பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அறுவடை செய்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பலாப்பழங்கள் ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதாலும், சாலையோர தள்ளுவண்டிகளிலும் பழங்களை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சீசன் நேரத்தில் 100 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பலாப்பழங்கள், தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாவதே பெரும் போராட்டமாக உள்ளது.
மேலும் வாகன வாடகை, டீசல், சுங்க கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு கூட கட்டுபடியாகததால் வியாபாரிகள் பலாப்பழமனத்தை கொள்முதல் செய்து விற்பனை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே பலாப்பழங்களை அறுவடை செய்யவும், பண்ருட்டி பகுதியில் இருந்து தடையின்றி வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் பலாப்பழங்களை ஏற்றிச்செல்லவும், பலாப்பழங்களை பதப்படுத்தி வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.