காரை நிறுத்துங்க... என்னன்னு பார்ப்போம்... விபத்தில் காயமடைந்த தம்பதியை மீட்ட அமைச்சர் எம்.ஆர்.கே..!
கடலூர்: கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கரை பகுதியில், டூவிலர் மோதி விபத்தில் சிக்கிய தம்பதியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.வின் இந்த மனிதாபிமானமிக்க செயலுக்கு விபத்தில் காயமடைந்த தம்பதியின் உறவினர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
வேகமாக சென்று கொண்டிருந்த அமைச்சரின் கார் திடீரென நின்றதும் அவர் காரை விட்டு இறங்கி விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்க நடந்து சென்றதும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் எம்.ஆர்.கே.
கடலூர் மாவட்டத்தில் காலை முதலே பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்ற வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அதனை முடித்துவிட்டு நண்பகலில் வீராணம் ஏரிக்கரை சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது டூ-விலர் சாய்ந்த நிலையில் விபத்தில் சிக்கிக் கிடந்த தம்பதியை பார்த்தவுடன் தனது ஓட்டுநரிடம் கூறி காரை நிறுத்தச் சொல்லியுள்ளார்.

கார் நிறுத்தம்
இறங்கி என்னன்னு பார்ப்போம் என்று கூறிக்கொண்டே காரிலிருந்து இறங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரத்தம் சொட்ட நின்ற அவர்களை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், தனது தனி உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியை அழைத்த அமைச்சர் விபத்தில் காயமடைந்த தம்பதியை மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கான உதவியை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

போலீஸ் விசாரணை
இதனிடையே இந்த நிகழ்வு குறித்து புத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இரண்டு டூவீலர்கள் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. மேலும், விபத்தில் சிக்கியவர்கள் சேகர் மற்றும் சுலோச்சனா என்பதும் அவர்கள் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இன்று ஞயிற்றுக்கிழமை என்பதால் நெடுஞ்சேரியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அவர்கள் விபத்து சிக்கியுள்ளனர்.

நன்றி
தனது பாதுகாப்பு வாகனத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கட்சிக்காரர்கள் வாகனங்கள் அணிவகுக்க நிகழ்விடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இவரது இந்த செயலுக்கு விபத்தில் காயமடைந்து மீட்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications