கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
திருமணம் ஆகாமல் கருவுற்றதால் இளம் பெண்ணிற்கு பிறக்க போகும் குழந்தையை தத்தெடுக்க ஒரு தம்பதி விருப்பம் தெரிவித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி: திருமணம் ஆகாமல் கருவுற்ற இளம்பெண் ஒருவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடைபெற்றது.
திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பம் தரித்தார். இந்த விவகாரத்தையடுத்து மாணவி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு உறவினர் வீட்டில் தங்கியிருந்த அந்த இளம்பெண் கருவை கலைக்க முயற்சி செய்தார். இது தொடர்பான வழக்கும் பதிவானது.

திருமணம் ஆன சகோதரியிடம்
இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் மாணவியை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு, கருவை கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்று இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறியது. இதையடுத்து மாணவிக்கு பிரவசம் ஏற்படும் வரை கவனித்துக்கொள்ளுமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வார்யா பாட்டியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. மாணவிக்கு பிறக்கப்போகும் குழந்தையை தத்தெடுக்க விருப்பமா என்று மாணவியின் திருமணம் ஆன சகோதரியிடம் கேட்கப்பட்டது. ஆனால், மாணவியின் சகோதரி ஏற்க மறுத்து விட்டார்.

தாயாரும் உடல் நலம் இன்றி இருப்பதால்
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மிகவும் வித்தியசமான வழக்கு மற்றும் ரகசியம் காக்கப்பட வேண்டிய வழக்கு என்பதால் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் சேம்பரில் அழைத்து விசாரணை நடத்தினர். மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் மிஸ்ரா, மாணவியின் தந்தை இறந்து விட்டார். தாயாரும் உடல் நலம் இன்றி இருப்பதால் மாணவி தங்குவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மாணவிக்கு பிரசவம் நடக்கும் வரை தன் வீட்டில் வைத்து பாதுகாத்துக் கொள்வதாக கூறினார். இதற்கு நீதிபதிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

ரகசியமாக வைக்க வேண்டும்
தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும் போது, "மாணவிக்கு பிறக்க இருக்கும் குழந்தையை தத்தெடுக்க ஒரு தம்பதி விருப்பம் தெரிவித்துள்ளனர். தத்தெடுப்பு ஆணையத்தில் முறையாக பதிவு செய்துள்ளனர். தத்தெடுக்கும் தம்பதியின் விவரம் மாணவிக்கும் தெரியப்படுத்தக்கூடாது. தம்பதியின் அனைத்து விவரங்களும் நீதிமன்ற ஆவணங்களில் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்" என்றார்.

அனைத்து ஆவணங்களிலும்..
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மாணவிக்கு பிறக்கு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள அந்த தம்பதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான நடைமுறைகளை உரிய விதிகளை பின்பற்றி மத்திய தத்தெடுப்பு ஆணையம் முடிக்க வேண்டும். மாணவியை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து உரிய மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும். தத்தெடுப்பவர்களின் விவரங்கள் நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களிலும் ரகசியமாக வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

மன அழுத்தத்தில் இருந்ததாக
அரசியல் அமைப்பு சட்டபிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விவகாரத்தில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். முன்னதாக இந்த விவகாரத்தில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் மனிதாபிமான முறையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி நடந்து கொண்டதை பாராட்டுகிறோம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications