ஆப்கான்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை நாமே பாராட்டுவது முதிர்ச்சியற்றது - ப.சிதம்பரம்
ஆப்கானிஸ்தான் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக நம்மை நாமே பாராட்டுவது முதிர்ச்சியற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சீனா, பாகிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான கவலைக்குரியது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக நம்மை நாமே பாராட்டுவது முதிர்ச்சியற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்துள்ளது. அங்கிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் முழுவதுமாக வெளியேறி விட்டன. இதனை தாலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர்.

அமெரிக்கா வெளியேறி விட்டாலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என அந்நாடு உறுதி அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தன. எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்லது தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது; அந்த நாட்டில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது என வலியுறுத்தியது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு மக்கள் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான முறையில் வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 13 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
எந்த ஒரு நாடும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதேவேளையில், நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தன. எனினும் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.
இந்த தீர்மானம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஆப்கானிஸ்தான் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து மத்திய அரசு தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது. ஆனால், தீர்மானம் இரு அர்த்தங்களை உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்.
முதலாவது, இந்த விஷயம், இந்தியாவின் மனநிறைவுக்காகத் தீர்க்கப்பட்டுள்ளது அல்லது முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு கவுன்சலில் அது நடக்கவில்லை. இரண்டாவது அர்த்தம், நம்முடைய விருப்பங்களைக் காகிதத்தில் தெரிவித்தோம். அந்தக் காகிதத்தில் சிலரும் கையெழுத்திட்டுள்ளார்கள். இதுதான் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடந்தது. ஆதலால் நம்மை நாமே பாராட்டிக்கொள்வது முதிர்ச்சியற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, பாகிஸ்தான் தொடர்புடைய தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கன் கவலைக்குரியதுதான் என்றும்
ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications