புயலுக்கு பின் அமைதி.. ‛நாய்’ சர்ச்சைக்கு நடுவே.. மோடியுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட கார்கே.. ஏன்?
டெல்லி: ‛நாய்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியது பெரும் சர்ச்சையான நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர மல்லிகார்ஜூன கார்கே மறுத்த நிலையில் அடுத்து சிறிது நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இந்த போட்டோ தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. இது ஏன்? எப்படி நடந்தது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சமீபத்தில் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தான் சமீப காலமாக அவர் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவின் தலைவர்கள், பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
சமீபத்தில் குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ‛‛பிரதமர் மோடிக்கு ராவணன் போல் 10 தலை உள்ளதா'' என கார்கே பேசியது சர்ச்சையை கிளப்பியது.

மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடந்தது. இந்த யாத்திரையில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அதன்பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:

நாய் கூட இறந்ததா?
காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி உயிர் தியாகம் செய்தனர். ஆனால் பாஜக எதையும் இழக்கவில்லை. அவர்களின் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா?. இருப்பினும் அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுகிறோம். மேலும் மக்கள் முன்பு சிங்கம் என அடையாளப்படுத்தி கொள்ளும் பிரதமர் மோடி சீனாவுடனான எல்லை பிரச்சனையில் எலியாக அஞ்சி விடுகிறார்'' என சாடியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் சர்ச்சை
மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. பாஜக தலைவர்களை சுட்டிக்காட்டியபோது நாய் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியதை பாஜகவினர் கடுமையாக கண்டித்தனர். இது இன்றைய நாடாளுமன்ற கூட்டத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்றத்திலும், மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தினார். இதற்கு மல்லிகார்ஜூன கார்கே ஒப்புக்கொள்ளவில்லை. வெளியில் பேசிய விஷயத்தில் அவையில் மன்னிப்பு கோர முடியாது என அவர் புறக்கணித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாதம் நடந்தது. மேலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

கோபமடைந்த ஜெகதீப் தன்கர்
இதனால் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவையின் தலைவருமான ஜெகதீப் தன்கர் கோபமடைந்தார். ‛‛இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் குழந்தைகள் போல் கத்தி கூச்சலிட்டு கொண்டு இருக்கிறீர்கள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. நாம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டோம். ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நமது இந்த செயல்பாடுகளை எல்லாம் 135 கோடி மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். நாம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்'' என கடிந்து கொண்டார்.

சிறுதானிய உணவு
இந்த சம்பவம் நடந்த பிறகு மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. 2023ம் ஆண்டை சிறுதானிய பயிர்களை ஊக்குவிக்கும் கருப்பொருள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனால் இன்று நாடாளுமன்ற வாளகத்தில் சிறுதானியம் சார்ந்த விருந்துக்கு மத்திய விவசாயத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். கம்பு, சாமை, கேழ்வரகு உள்பட பல்வேறு சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டது.

பிரதமர் மோடியுடன், கார்கே
இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களை தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது பிரதமர் மோடி, மல்லிகார்ஜூன கார்கே, ஜெகதீப் தன்கர் உள்பட அனைவரும் சிரித்து பேசினார். பாஜகவினரை நாய் எனக்கூறியதாக குற்றம்சாட்டி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பியூஷ் கோயலுக்கும், மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் இடையே கடும் வாதம் நடந்த நிலையில் அடுத்த சிறிது நேரத்தில் அவர் பிரதமர் மோடியுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டது தொடர்பான போட்டோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications