ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை நவ. 26 வரை கைது செய்ய தடை நீடிப்பு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்படும் என்று பட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளன என்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.
[ரணில் மீண்டும் பிரதமரானால் அதிபராக இருக்க மாட்டேன்... சிறிசேனா தடாலடி! ]
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்துவருகின்றன. டெல்லியில் உள்ள பட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வழக்கு நடக்கிறது.
இந்த விவகாரத்தில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அக்டோபர் 8ம் தேதி மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, வழக்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம். அதுவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை நீடிப்பு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரத்தின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அமலாக்கத்துறை, ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுப்பதாக அமலாக்கத்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டதோடு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.
ஆனால் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்க மறுத்த, பட்டியாலா நீதிமன்றம், நவம்பர் 26ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. அதுவரை, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications