நிர்பயா வழக்கில் புதிய உண்மைகள் என்னிடம் இருக்கு.. அக்ஷய்குமார் ஒரு அப்பாவி.. வழக்கறிஞர் வாதம்
Recommended Video
டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளி அக்ஷய் குமார் ஒரு அப்பாவி, ஏழை என அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதையடுத்து அக்ஷய்குமாரின் தூக்கு தண்டனை குறித்து சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர் பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூஷன், ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தினர். அப்போது அக்ஷய்குமார் சிங் தரப்பில் ஏ பி சிங் ஆஜரானார்.
குற்றவாளியாக்கப்பட்ட அக்ஷய்
அவர் தனது வாதத்தில் இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் புதிய உண்மைகள் உள்ளன. எனது கட்சிக்காரர் அக்ஷய் குமார் ஊடகம், பொதுமக்கள், அரசியல் அழுத்தம் காரணமாக அவர் குற்றவாளியாக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அப்பாவி
இந்த வழக்கில் முக்கிய சாட்சியான அமரீந்தர் பாண்டேவிடம் நான் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். அதில் அவரது ஆதாரங்களும் அவர் சமர்ப்பிப்புகளும் இந்த வழக்கில் நம்பும்படியாக இல்லை. இந்த வழக்கில் என் கட்சிக்காரர் அக்ஷய் குமார் ஒரு அப்பாவி, அவர் ஒரு ஏழை.
மருந்து
இறந்த மாணவி நிர்பயா முதன்முதலாக அளித்த மரண வாக்குமூலத்தில் எந்த குற்றவாளிகளின் பெயரையும் கூறமுடியவில்லை. அவர் இறப்புக்கு காரணம் ரத்தத்தில் விஷம் கலந்தது, அதிக அளவுக்கு மருந்துகளை உட்கொண்டது என சொல்லப்படுகிறது.
பொய்யான அறிக்கைகள்
எனவே அவரது வாக்குமூலத்திலேயே சந்தேகம் இருக்கிறது. யாரோ சொல்லிக் கொடுத்து அவர் தவறான வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். அந்த பெண்ணாக முன்வந்து எதையும் கூறவில்லை. மேலும் அக்ஷய் குமாரின் பெயரை அவர் கூறவேயில்லை. பொய்யான அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அக்ஷயை குற்றவாளியாக்க அனைத்தும் ஜோடிக்கப்பட்டுவிட்டது. அவர் தவறாக இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டார்.
குற்றங்கள்
அரசியல் காரணமாக அவசர அவசரமாக தூக்கிலிட பார்க்கிறார்கள். எங்கள் தரப்பு நியாயங்களை கேட்கவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக வழக்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை என்பது மிகவும் பழமையான தண்டனையாகும். இந்த தண்டனையால் குற்றவாளிகள்தான் கொல்லப்படுகிறார்களேயொழிய குற்றங்கள் ஒழிவதில்லை. இந்த தூக்கு தண்டனை மற்றவர்களை குற்றங்கள் செய்வதிலிருந்து தடுப்பதாக இருக்கும் என எனக்கு தெரியவில்லை என்றார்.
என்ன வழக்கு?
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் வினய் சர்மா, முகேஷ், பவன், அக்ஷய் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.