திருமணமாகாத பெண்களுக்கும் கரு கலைப்பு செய்ய உரிமை உண்டு- உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனைத்து வகை பெண்களும் தகுதி உடையவர்கள் தான் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (வயது 25) திருமணம் செய்துகொள்ளாமல் காதலனுடன் வசித்து வந்தார்.
இருவரும் ஒன்றாக வசித்து வந்த இந்த நிலையில் காதலனால் இளம்பெண் கர்ப்பமானார். ஆனால் கர்ப்பமான பிறகும் இளம்பெண்ணை காதலர் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.
14 முறை கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு! ஆண் நண்பரின் கொடூர டார்ச்சர்.. இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
கருவை கலைக்க அனுமதிக்கும்படி
காதலன் கைவிட்டதாலும், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதாலும் அந்த பெண் கருவை கலைக்க முடிவு செய்தார். கர்ப்பம் ஆகி 23 வாரங்கள் ஆகிவிட்டதால் இளம்பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது கருவை கலைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர், எனக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் என்னால் இக்குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனால் கருவை கலைக்க அனுமதிக்கும்படியும் கூறியிருந்தார்.
மேல்முறையீடு
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கர்ப்பம் அடைந்து 20 வாரங்கள் ஆகிவிட்டதால், இளம்பெண் கருவை கலைக்கக்கூடாது என்றும் குழைந்தையை பெற்று அந்த குழந்தையை அரசிடம் ஒப்படைக்கலாம் எனவும் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண்ணின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
ஆய்வுக்கு உட்பட்டு கருவை கலைக்க
இந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில், கருக்கலைப்பு சட்டத்தில் 2021- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி, 3-வது பிரிவில் கணவன் என்பதற்கு பதில் பார்ட்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால் திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்பதே ஆகும். எனவே, மனுதாரருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆய்வுக்கு உட்பட்டு கருவை கலைக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு இருந்தது.
அனைத்து பெண்களும் தகுதி
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் விரிவான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில், ''தேவையற்ற கருவை கலைக்கும் ஒரு பெண்ணின் உரிமையை திருமண நிலையை முன்வைத்து பறிக்க முடியாது. மருத்துவ கருக்கலைப்பு சட்டம் மற்றும் விதிகளின் படி 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கும் உண்டு. சட்டப்பூர்வமாக மற்றும் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் தான்'' என்று கூறப்பட்டுள்ளது.