யம்மாடியோவ்! 122 ஆண்டுகள் கழித்து பதிவான அதிகபட்ச வெப்பநிலை.. சூடான டிசம்பர்! ஆய்வாளர்களின் ஷாக்
டெல்லி: வழக்கமாக ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் நாடு முழுவதும் கடும் குளிர் இருக்கும் நிலையில், 2022ம் ஆண்டின் டிசம்பர் மாதம் வெப்பமயமானதாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் கடந்த டிசம்பரில் பதிவாகியுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ராஜேந்திர ஜெனமணி கூறியதாவது, "பொதுவாக டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு இந்தியா மற்றும் வட இந்தியாவில் கடுமையான குளிர் இருக்கும். ஆனால் இம்முறை இந்த இரண்டு பகுதியிலும் சராசரியான வெப்பநிலையை விட அதிகமான வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் மாதத்தில் வெப்ப நிலையானது இயல்பான அளவை விட அதிகமாக பதிவாகி இருந்தது. தென்னிந்தியாவை பொறுத்த அளவில் வெப்ப அலை கிழக்கு நோக்கி காணப்பட்டது. இதனால் இந்த பகுதியிலும் வெப்பநிலை அதிகமாகவே இருந்தது. கடைசியாக 1901ம் ஆண்டு டிசம்பரில் இந்த அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது.
அரசியல் செய்கிறேன் பேர்வழியென்று அநாகரீகமாக நடக்கிறார் அண்ணாமலை! செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!
122 ஆண்டுகளுக்கு பிறகு
அதன் பின்னர் கடந்த 2008 டிசம்பரில் 21.46oC எனும் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. இதனையடுத்து கடந்த டிசம்பரில் 21.49oC ஆக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காலத்தில் தென்னிந்தியாவில் மாண்டஸ் புயல் உருவானதும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த புயலானது மற்ற மாநிலங்களில் இருந்த ஈரப்பதத்தை உறிஞ்சு எடுத்துக்கொண்டது. எனவே வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஈரப்பதம் குறைவாக இருந்தது. டிசம்பர் மாதம் 15ம் தேதி வரை கடுமையான குளிர் இந்த மாநிலங்களில் பதிவாகியிருந்தன. ஆனால் 15ம் தேதிக்கு பிறகு எல்லாம் அப்படியே மாறிவிட்டது.
குளிர் அலை
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 18ம் தேதி முதலும், சண்டிகர், டெல்லி மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 21ம் தேதியிலிருந்தும் குளிர் அலை வீசத் தொடங்கியது. இருந்தும் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ளார். கடந்த ஒரு மாத காலம் என்பது பூமியின் 'பெரிஹேலியன்' காலமாகும். இந்த காலத்தில் சூரியனுக்கு மிக அருகில் பூமி செல்லும். ஒரு வேளை இதனால் கூட பூமியின் வெப்பநிலை அதிகரித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் 1 வானியல் அலகு எனப்படும். ஆனால் நேற்றைய தினம் சூரியன் 0.9833 வானியல் அலகு எனும் அளவில் பூமிக்கு நெருக்கமாக வந்திருந்தது.
பெரிஹேலியன்
ஆனால் இந்த சம்பவத்திற்கும் பூமியின் வெப்பநிலை உயர்வதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நாசா கூறியுள்ளது. ஏனெனில் என்னதான் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருந்தாலும் அதற்கு பூமி தன்னுடைய கடல் பரப்பைதான் காட்டிக்கொண்டிருக்கிறது. எனவே அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தை இந்த கடல் நீர் உறிஞ்சிக்கொண்டுவிடும். மட்டுமல்லாது பூமி 23.44 டிகிரி சாய்ந்து இருப்பதால் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமியை தாக்காது. எனவே அதிக வெப்பம் பதிவாகாது என்று கூறியுள்ளனர். அப்படியெனில் கடந்த டிசம்பரில் அதிகம் வெப்பம் பதிவானதற்கான காரணம் என்ன? என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கார்பன் உமிழ்வு
அதிக அளவு கார்பன் உமிழ்வு ஏற்பட்டிருந்தாலும் கூட வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு வெளியிடப்படும் கார்பன் பூமிக்கும் வரும் சூரியனின் வெப்பத்தை அப்படியே தக்கவைத்துள்கொள்ளும். வழக்கமாக இந்த வெப்பமானது பூமிக்கு வந்து எதிரொலித்து சென்றுவிடும். ஆனால் கார்பன் இதனை சேமித்து வைத்துக்கொள்ளும். இதேபோல தினமும் நடக்கும் சூழலில் பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.