ஆன்லைனில் வேட்பு மனு- வாக்கு பதிவு, எண்ணிக்கையில் குறைவான நபர்கள்- தலைகீழாக மாறும் தேர்தல் நடைமுறை?
டெல்லி: மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா இந்திய தேர்தல் முறையில் பல தலைகீழ் மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கப் போகிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் பீகார் சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கி உள்ளது.
உலக நாடுகளில் மிகப் பெரிய அழிவை உருவாக்கி இருக்கிறது கொரோனா. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிறது. கொரோனா மரணங்களும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல், சட்டமேலவை தேர்தல்களை கொரோனா காலத்தினூடே தேர்தல் ஆணையம் நடத்தி முடித்தது. இந்த தேர்தல்கள் கூட சொற்ப எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க கூடியது என்பதால் சாத்தியமானது. ஆனால் பொதுத்தேர்தல்களை அப்படி நடத்துவது என்பது மிகப் பெரிய சவாலான விஷயம்.
ஒரே தேசம்.. ஒரே தேர்வு. பொது நுழைவுத் தேர்வு, தேசிய ஆள்தேர்வு முகமை (NRA) ஏன்? மத்திய அரசு விளக்கம்
பீகார் தேர்தல்
பீகார் மாநில சட்டசபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா காலமாக இருந்தபோதும் உரிய காலத்தில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்குச் சாவடிகளில் முன்னரைப் போல ஆயிரக்கணக்கானோரை அனுமதிக்கும் நடைமுறை இனி இருக்காது.
அதிரடி மாற்றங்கள்
ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்கள்தான் இருப்பார்கள்; இதனால் வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்; வாக்கு சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவையும் அதிகரிக்கும். முதல் கட்டமாக இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
பிரசாரத்தில் கட்டுப்பாடு
இதனைத் தொடர்ந்து பிரசார முறைகளில் கட்டுபாடுகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. வீடு வீடாக பிரசாரம் செய்வது, பொதுக் கூட்டங்கள் நடத்துவது போன்ற ஆடம்பர வெட்டி செலவுகளுக்கு கொரோனாவை முன்வைத்து தேர்தல் ஆணையம் வேட்டு வைக்க காத்திருக்கிறது.
ஆன்லைனில் வேட்பு மனுத்தாக்கல்
அதேபோல் வேட்புமனுத் தாக்கலையும் கூட ஆன்லைனில் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். பீகார் தேர்தலில் பின்பற்றப்போகிற இந்த புதிய தலைகீழ் மாற்றங்கள்தான் அடுத்து தமிழகம், கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல்களிலும் கடைபிடிக்கப்பட இருக்கிறது. கோவில் திருவிழாக்கள் எப்படி கொரோனாவால் காணாமல் போய் கொண்டிருக்கிறதோ அப்படித்தான் ஜனநாயகத்தின் திருவிழாவான தேர்தல் கொண்டாட்டங்களும் எளிமையாக்கப்பட இருக்கின்றன.