சிபிஐ வழக்கில் இயக்குனரின் அறிக்கை உண்மையில் கசிந்ததா? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கொடுத்த பதில் மனுவின் விவரங்கள் மீடியாக்களில் கசிந்தது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை நடத்த இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கொடுத்த பதில் மனுவின் விவரங்கள் மீடியாக்களில் கசிந்தது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று நிறைய கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து முழு விவரத்தை அளிக்கும்படி அலோக் வெர்மா தரப்பிற்கு ஆணையிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தனது கட்டாய விடுப்பிற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் ஒரு கட்டமாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை விஜிலென்ஸ் அமைப்பு விசாரணை செய்தது.

சிபிஐ இயக்குனர் தொடர்பான விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் கடந்த வாரம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீதான விசாரணை நடந்து வருவதை அடுத்து இந்த அறிக்கை மீதான பதில் மனுவை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா நேற்று தாக்கல் செய்தார்.
அதன் மீதுதான் இன்று விசாரணை நடந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அறிக்கை விவரம் மீடியாக்களில் வெளியானதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மாலை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம் எப்படியோ வெளியே கசிந்துள்ளது.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து இன்று மாலை இந்த விவரம் எப்படி கசிந்தது என்பது தொடர்பாக தனி விசாரணை நடத்தப்பட்டது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு தனி விசாரணை நடத்தியது. அதில் இந்த அறிக்கை உண்மையில் கசிந்ததா என்று அலோக் வெர்மாவின் வழக்கறிஞர் பாலி நாரிமன் விளக்கம் அளித்தார்.
அவர், நாங்கள் கொடுத்த சீல் செய்த அறிக்கையின் விவரம் எங்கும் கசியவில்லை. எங்களிடம் அறிக்கை கொடுக்கும்படி கூறிய தேதி 16ம் தேதி, நாங்கள் அறிக்கை தாக்கல் செய்தது 19ம் தேதி ஆனால், இந்த கட்டுரை 17ம் தேதி வந்துவிட்டது என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள் அப்படி என்றால், 20ம் தேதியான இன்று வந்த கட்டுரைக்கு என்ன சொல்வீர்கள் என்று கூறினார். அதற்கு, நாரிமன், இன்று வந்த கட்டுரைகள் எல்லாம், அலோக் வெர்மாவிடம் விஜிலென்ஸ் தரப்பு விசாரணை செய்த போது அலோக் அளித்த பதில்களை அடிப்படையாக வைத்து வந்த கட்டுரைகள், அதற்கும் சீல் செய்த அறிக்கைக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்கள்.
ஆனால் நீதிபதிகள் அமர்வு இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை 29ம் தேதி நடக்கும் போது, இதற்கான உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications