6 மாநிலங்களுக்கு ரூ 3,063.21 கோடி நிதி வழங்கிய மத்திய அரசு- தமிழகத்துக்கு ஒதுக்கீடு இல்லை!
டெல்லி: இயற்கை பேரிடரை எதிர்கொண்ட குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மட்டும் ரூ3,063.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் பெருமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து இன்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021-ம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக ரூ 3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

குஜராத், மே.வங்கம்
இயற்கை பேரிடர்களை எதிர்கொண்ட இந்த ஆறு மாநிலங்களின் மக்களுக்கு உதவுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உறுதியை இது காட்டுகிறது. நிதி ஒதுக்கீட்டின் விவரம் வருமாறு: 'டௌக்டே' சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1,133.35 கோடி, 'யாஸ்' சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.586.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், கர்நாடகா
2021 தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம்/நிலச்சரிவுகளுக்காக அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ 187.18 கோடி. இந்த கூடுதல் உதவியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு கூடுதலாகும். 2021-22ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

மத்திய அரசு விளக்கம்
மேலும், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 'டௌக்டே' மற்றும் 'யாஸ்' புயல்களுக்குப் பிறகு, 20.05.2021 அன்று தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குஜராத்திற்கு முன்பணமாக ரூ 1,000 கோடி விடுவிக்கப்பட்டது, 29.05.2021 அன்று மேற்கு வங்காளத்திற்கு ரூ 300 கோடி வழங்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கையைப் பெறுவதற்குக் காத்திருக்காமல், 22 அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுக்களை மத்திய அரசு உடனடியாக நியமித்தது. இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரண பணிகளை மேற்கொண்டு, குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரி செய்வதற்காக 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக் கோரி தமிழக அரசு நவம்பர் 16, நவம்பர் 25, டிசம்பர் 15-ஆகிய தேதிகளில் விரிவான அறிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications