தமிழக ரயில்வே திட்டங்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான கருத்துருக்கள் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரயில்வே இணையமைச்சர் ராஜேன் கொஹைன் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்தில் தமிழக நலனுக்கான பல்வேறு ரயில் திட்டங்கள், அது தொடர்பான நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து அதிமுக எம்பிக்களான மைத்ரேயன், சசிகலா புஷ்பா, இளங்கோவன், திமுக எம்பியான திருச்சி சிவா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
மதுரை, தூத்துக்குடி இடையேயான ரயில்பாதை அமைக்கும் திட்டம், ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் தமிழக ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள், ரயில்வே உட்கட்டமைப்புகளுக்கு அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீடு, அந்தியோதயா ரயில் திட்டம் குறித்தும் அவர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தனர்.
அதிமுக, திமுக எம்பிக்கள் கேள்வி
அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சரான ராஜேன் கொஹைன் எழுத்து மூலமாக பதில் அளித்து உள்ளார். அவர்களில் அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா, மதுரை, தூத்துக்குடி இடையேயான புதிய ரயில்பாதை, நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
பதிலளித்த மத்திய அமைச்சர்
அந்த கேள்விகளுக்கு இணையமைச்சரான ராஜேன் கொஹைன் பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு
மதுரை, தூத்துக்குடி இடையேயான புதிய ரயில்பாதை அமைக்கும் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மொத்தமுள்ள 143.5 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த ரயில்பாதை அமைக்கும் பணியில் தூத்துக்குடி, மீளவிட்டான் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டமும் உள்ளது. அதற்காக மீளவிட்டான், மேல்மருதூர் இடையேயான 18 கிலோமீட்டர் பாதைக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்பாதைக்கு நிலம் எடுப்பு
184.92 ஏக்கர் நிலங்கள் இதுவரை ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த நிலஎடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. எஞ்சியுள்ள 125.5 கிலோமீட்டர் தொலைவுக்கான நிலஎடுப்பு ஆவணங்கள், அது தொடர்பான விவரங்கள் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன.
காலக்கெடு இல்லை
எஞ்சியுள்ள நிலஎடுப்பு பணிகள், அமைக்கப்பட வேண்டிய ரயில்வே வசதிகளை இந்த திட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.ஆகையால், மதுரை, தூத்துக்குடி இடையேயான புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகள் எப்போது முடியும் என்ற காலக்கெடுவை அறிவிக்க முடியாது என்று இணையமைச்சர் ராஜேன் கொஹைன் கூறினார்.
ஆதர்ஷ் திட்டம் குறித்து கேள்வி
ஆதர்ஷ் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 1,253 நிலையங்களில் 1,065 ரயில் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலையங்கள் 2018-19 ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்பட உள்ளன. இது குறித்து ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பிய திமுக எம்பி திருச்சி சிவா, எத்தனை ரயில் நிலையங்கள் ஆதார்ஷ் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டிருந்தன என்றும் அவ்வாறு இல்லை என்றால் அதற்கான காரணங்களை கூறுமாறும் வினவியிருந்தார்.
அபிவிருத்தி பணிகள் தொடக்கம்
அதற்கு இணையமைச்சர் ராஜேன் கொஹைன் அளித்துள்ள பதில்கள் வருமாறு:
ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் ரயில்நிலையங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் மத்திய ரயில்வே துறை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 2009-10ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 1253 நிலையங்களில் 1065 ரயில் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 49 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பணிகள் விரைவில் முடிவடையும்
அவைகளில் 43 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுவிட்டன. 2019-20ம் ஆண்டில் எஞ்சிய ரயில்நிலையங்கள் மேம்படுத்தப்படும். மேலும், ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கான வசதிகளும் விரைவில் முழுமையாக செய்து முடிக்கப்படும் என்று கூறினார்.
சிறப்பு நிதி ஒதுக்கீடு உண்டா?
தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்று அதிமுக எம்பி மைத்ரேயன் கேள்வி எழுப்பினார். மேலும் ரயில்வே துறையிடம் உள்ள நிலங்கள் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இணையமைச்சர் ராஜேன் கொஹைன், இது தொடர்பான அறிக்கை விவரங்கள் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
எந்த முடிவும் இல்லை
இதேபோன்று, அதிமுக எம்பி இளங்கோவன், சென்னை எழும்பூர் கன்னியா குமரி வரை கூடுதலாக அந்தியோதயா ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேன் கொஹைன், தற்போது வரை அது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பதிலளித்தார்.