குலாம்நபிக்கு குட்டு.. புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு பாராட்டு! ஜெய்ராம் ரமேஷ் "டபுள் மீனிங்" ட்வீட்
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா பத்ம பூஷன் விருதை நிராகரித்திருக்கிறார். இதை பாராட்டி இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.
Recommended Video
மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா நிராகரித்திருக்கிறார். இதற்கு பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.
புத்ததேவ் பட்டாச்சார்யா
எனக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து எதுவும் தெரியாது; யாரும் என்னிடம் தகவல் கூறவில்லை; விருது கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு தரப்போ, புத்ததேவின் மனைவியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருதை ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர்,அரசுக்கு நன்றி தெரிவித்தார், என்கிறது.
ஜெய்ராம் ரமேஷ்
புத்ததேவ் பட்டாச்சார்யா விருதை நிராகரித்ததையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விவாதித்திருக்கிறார். அதில், "புத்ததேவ் சரியான காரியத்தை செய்துள்ளார். அவர் ஆசாத், அதாவது அவர் விடுதலை விரும்பி, மற்றவரைப் போல் அவர் குலாம் அல்ல, அவர் அடிமையல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
அடிமை
இந்தியில் குலாம் என்ற வார்த்தைக்கு அடிமை என்பது பொருள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பெயரை வைத்தே, டிவிட்டரில் புத்ததேவை பாராட்டி இருக்கிறார், அதே நேரம் குலாம் நபியை விமர்சிக்கவும் செய்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ். மற்ற கட்சியைச் சேர்ந்தவரைப் பாராட்டி, சொந்தக் கட்சியைச் சேர்ந்தவரை ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருப்பது காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலைக் காட்டுகிறது.
ஆசாத்
பத்ம விருதுப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது விமர்சனங்களை ஈர்த்தது. இருவருமே மோடி எதிர்ப்பாளர்கள். அரசை கடுமையாக விமர்சித்தவர்களுக்கு விருது என்று கூறப்பட்டது. இந்நிலையில், விருதை புத்ததேவ் நிராகரித்தார், ஆனால் ஆசாத் இதுகுறித்து எதுவும் குறிப்பிடவில்லை. உத்தர பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜெய்ராம் ரமேஷ் போட்ட ட்வீட் காங்கிரசிற்குள் இருக்கும் புகைச்சலை அம்பலப்படுத்தியுள்ளது.