"பாஜக"வின் பி டீம்! குலாம் நபி ஆசாத்தால் காங். பெரிய பாதிப்பு? காஷ்மீர் பொறுப்பாளர் பரபர புகார்
டெல்லி: குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ள நிலையில், காங்கிரஸின் ரஜனி பாட்டீல் பரபர குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. காங்கிரஸ் வலுவாக இருந்த மாநிலங்களில் கூட ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
இதனால் காங்கிரஸ் தலைமை மீதான விமர்சனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காங்கிரஸை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குலாம் நபி ஆசாத் சொன்னது சரிதான்.. காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.. மகாராஷ்டிரா துணை முதல்வர் அட்டாக்!
காங்கிரஸ்
2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் காங்கிரஸ் எதிர்கொண்ட 49 சட்டசபைத் தேர்தல்களில் 39 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. அதேபோல எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத மாநிலங்களில் கூட காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. குறிப்பாகக் காங்கிரஸ் வலுவாக இருந்த கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கூட காங்கிரஸ் கையைவிட்டுப் போனது.
விலகல்
மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதன் காரணமாக பாஜக இல்லாத பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் கூட, மாற்றுக்கட்சிக்காக மக்கள் செல்கிறார்களே தவிர, காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பதில்லை. இந்த இக்கட்டான சூழலில் மூத்த தலைவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். ஏற்கனவே கபில் சிபில் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகிய நிலையில், கடந்த வாரம் குலாம் நபி ஆசாத்தும் கட்சியில் இருந்து விலகினார்.
சாடல்
மேலும், காங்கிரஸ் கட்சியில் விலகுவதாகத் தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ராகுல் காந்தியின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி நடவடிக்கை குழந்தைத் தனமாக இருப்பதாகச் சாடியிருந்தார். இதனிடையே அவர் பாஜகவில் இணைய உள்ளதாக முதலில் தகவல் வெளியான நிலையில், அவர் காஷ்மீரில் புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.
பாஜகவின் பி டீம்
இந்நிலையில், காஷ்மீரின் பொறுப்பாளர் ரஜனி பாட்டீல், குலாம் நபி ஆசாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆசாத் தொடங்கும் புதிய கட்சி "பாஜகவின் பி-டீம்" ஆகவே இருக்கும் எனச் சாடியுள்ளார். காஷ்மீரின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஜனி பாட்டீல் இரு நாட்கள் பயணமாகக் காஷ்மீர் செல்ல உள்ளார். அங்கு விரைவில் தேர்தல் நடக்கும் எனக் கூறப்படும் மாநிலத்தில் காங்கிரசுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு குறித்து கள ஆய்வும் அவர் செய்ய உள்ளார்.
ஏற்றுக் கொள்ள முடியாது
காஷ்மீரில் விரைவில் புதிய கட்சி தொடங்கப் போவதாக ஆசாத் கூறியது குறித்துக் கேட்டதற்கு, அது பாஜகவின் பி-டீம் என்று ரஜனி பாட்டீல் சாடியுள்ளார். மேலும், தற்போதுள்ள சூழலில் ஆசாத் தொடங்க உள்ள சொந்த கட்சி காஷ்மீரில் காங்கிரஸுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என உறுதியாகக் கூற முடியாது என்றார். மேலும், கட்சி அவருக்கு இவ்வளவு செய்த பிறகும் அவர் இப்படிச் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சாடினார்.
விளக்கம்
முன்னதாக பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாகக் குலாம் நபி ஆசாத் கூறுகையில், "நான் எனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் செல்வேன். அங்கு எனது சொந்த கட்சியைத் தொடங்க உள்ளேன். அதைத் தேசிய அளவில் விரிவுபடுத்துவது குறித்து பின்னர் ஆலோசிப்பேன்" என்றார்.