24 மணி நேரத்தில் 2ஆவது மீட்டிங்.. பரபரக்கும் ஜி23 அதிருப்தி தலைவர்கள்! காங்.-இல் நடப்பது என்ன?
டெல்லி: காங்கிரஸில் தலைமை மாற்றம் குறித்து பலரும் பேசத் தொடங்கி உள்ள நிலையில், அதிருப்தி தலைவர்களாக அறியப்படும் ஜி23 தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்தது. பஞ்சாபில் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.
அதேபோல உத்தர்ப பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியால் கம்பேக் தர முடியவில்லை. பிரியங்கா காந்தி அங்கு 1.5 ஆண்டுகளாகப் பிரசாரம் செய்த போதும், வெறும் 2 இடங்களில் மட்டுமே காங். கட்சியால் வெல்ல முடிந்தது.
சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் ராஜினாமா? தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கும் தலைவர்கள்? பரபர தகவல்
2ஆவது மீட்டிங்
இந்த மோசமான தேர்தல் தோல்வி என்பது தலைமை குறித்த கேள்வியைக் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் எழுப்பி உள்ளது. அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களாக அறியப்படும் ஜி23 தலைவர்கள், தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜி-23 தலைவர்களின் குழு இன்று மாலை மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ஜி 23 தலைவர்கள் 2ஆவது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கபில் சிபல், ஆனந்த், பூபிந்தர் ஹூடா ஆகியோர் குலாம் நபி ஆசாத் வீட்டில் முகாமிட்டுள்ளனர்.
கூட்டங்கள் தொடரும்
பூபிந்தர் ஹூடா இன்று மதியம் தான் ராகுல் காந்திய சந்தித்திருந்தார். அது தொடர்பாக ஜி23 தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், காங். தலைமை மீது அழுத்தத்தை ஏற்படுத்த இதுபோன்ற கூட்டங்களில் இனி தொடர்ந்து நடைபெறும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதலே ஜி23 தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவர்கள்
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் தானும் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகத் தயாராக இருப்பதாகச் சோனியா காந்தி தெரிவித்தார். இருப்பினும், அதைக் காங்கிரஸ் செயற்குழு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இந்தச் சூழலில் தான் ஜி23 தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த தலைவர்களுடன், சேர்த்து வேறு சில புதிய காங். தலைவர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமை மாற்றம்
காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் போதிலும், அக்கட்சியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படுவதாக இல்லை. சமீபத்தில் காங். வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூட அனைவரையும் உள்ளடக்கிய தலைமை தேவை என்றும் 2024இல் பாஜகவை எதிர்கொள்ள ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளுடன் கூடிய கூட்டணி தேவை என்று கூறி இருந்தது. அதில் காங். உட்கட்சி தேர்தல் தொடர்பாகவே நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரைத் தலைவர் பதவிக்குக் கொண்டு வருவது குறித்தோ அதில் எதுவும் கூறப்படவில்லை
கட்சிக்குள் கோரிக்கை
காங். தலைமையில் மாற்றம் தேவை என்ற குறள் கட்சிக்குள்ளேயே அதிகரித்து வருகிறது, இருப்பினும், இப்போது காங். இருக்கும் நிலையில், அங்கிருந்து விலகுவது குறித்து அதிருப்தி தலைவர்கள் ஆலோசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, காங். பலவீனமாக உள்ள நிலையில், இப்போது அங்கிருந்து விலகுவது என்பது கட்சியைச் சிதைத்துவிடும் என அதிருப்தி தலைவர்கள் நினைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜி23 தலைவர்கள் தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
முன்னதாக காங். தலைமை தொடர்ந்து ஆதரவு அளித்து வருபவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தொண்டருடன் பேசவும் சோனியா காந்தி எப்போதும் தயாராக இருக்கிறார். முன்னெப்போதையும் விட இப்போது தான், நாம் ஒன்றாகப் போராட வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் சிலர் தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சரியான நோக்கம் கொண்டவர்களாக இருந்தால், ஏன் அதை முதலில் சோனியா காந்தியிடம் பேசவில்லை?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.