ஜூலையில் 13,45,82,577 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்.. ஆகஸ்ட் டார்கெட் 25 கோடி தடுப்பூசிகள் சாத்தியமா?
டெல்லி: இந்தியாவில் ஜூலை மாதம் மட்டும் 13,45,82,577 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதாவது ஒருநாளைக்கு சராசரியாக 43,41,373 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் இது 12.5% அதிகமாகும். ஜூன் மாதத்தில் மொத்தம் 11,96,69,381 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.
மத்திய அரசு கடந்த மே மாதத்தில், 11,95,70,000 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஜூன் மாதத்தில் விநியோகிக்கப்படும் என கூறி இருந்தது. ஜூன் மாதத்தில் மொத்தம் 11.46 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மே மாதத்தை ஒப்பிடுகையில் ஜூன் மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 96% அதிகரித்தது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 94.02 கோடி. கடந்த மே மாதம் 6,10,57,003 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதாவது ஒருநாளைக்கு சராசரியாக 19,69,580 கொரோன தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே போடப்பட்டிருந்த நிலை தற்போது முழுமையாக மாறி உள்ளது.
இந்தியாவில் 197 நாட்களாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 47,02,98,596 அல்லது 50% பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. இவர்களில் 39% பேர் முதலாவது கொரோனா தடுப்பூசி ;போட்டவர்கள்; 11% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகை 136.13 கோடி.
1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம்
நாட்டில் இதுவரை 46.99 கோடி பேர் கொரோனா தடுப்பூசிகள் போடாமல் உள்ளனர். கொரோனா 2-வது அலை தாக்கத்தின் போது ஏப்ரல்- மே மாதங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை மந்தமாக இருந்தது. கொரோனா 2-வது அலை சற்றே ஓய்ந்த நிலையில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 10%க்கும் அதிமமாக இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் 46 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக நாட்டில் ஒரு நாளைக்கு 23.87 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போட்டு முடிக்க 56 வாரங்கள் அல்லது 13 மாதங்கள் ஆகும். இந்தியாவில் கொரோனா 3-வது அலை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பரவக் கூடும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் கொரோனா 2-வது அலையை ஒப்பிடுகையில் அந்த அளவு கடுமையான பாதிப்பு இருக்காது என்பதும் வல்லுநர்களின் கருத்து.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு குறைவான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 25 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இலக்கை எட்ட முடியுமா? என்பது சந்தேகமாக உள்ளது.
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பை அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஜூலை மாதத்தில் 2.5 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் கிடைத்தன. இது ஆகஸ்ட் மாதத்தில் 3.5 கோடியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மாதத்துக்கு 10 முதல் 12 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க வேண்டிய நிலை உள்ளது.