டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா
டெல்லி: டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது. டெல்லியில் 44 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் 1837 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். இதனையடுத்து டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தலையிட்டு முடுக்கி விட்டார். டெல்லியில் மருத்துவமனைகளை அமித்ஷா ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா: தமிழக மருத்துவ நிபுணர் குழுவை சேர்ந்த கவுர் தனிமைப்படுத்தப்பட்டார்
இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்னர் காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு டெல்லி மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதிக்கப்பட்டார்.
இதனை அவர் தமது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் சத்யேந்திர ஜெயின் பங்கேற்றார். பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனைகளில் கொரோனா இல்லை என கூறப்பட்டது.
ஆனாலும் கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து அதிகம் இருந்தது. இதனால் சத்யேந்திர ஜெயின் மீண்டும் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.